தோனி செய்ததுதான் சரி.. ”தல” மீதான விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த பங்கார்
கடைசி நேரத்தில் விக்கெட்டுகள் விழுந்து கொண்டிருக்கும்போது அடித்து ஆடுவது கடினம். அதனால்தான் தோனி அடித்து ஆடவில்லை. அவர் செய்தது சரிதான் என இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் சஞ்சய் பங்கார் தோனிக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியில், 323 ரன்கள் என்ற இலக்குடன் இந்திய அணி ஆடியது. முதல் மூன்று விக்கெட்டுகளை தொடக்கத்திலேயே இழந்த இந்திய அணியை கோலியும் ரெய்னாவும் மீட்டெடுத்தனர். 27 ஓவரில் 140 ரன்களுக்கு 4 விக்கெட்டை இழந்தது இந்திய அணி.
இப்படியான இக்கட்டான சூழலில் களமிறங்கிய தோனி, 47வது ஓவர் வரை களத்தில் நின்றார். 20 ஓவர்கள் களத்தில் நின்ற தோனி, அடித்து ஆடவேயில்லை. மந்தமாக ஆடிய தோனி, வெற்றி இலக்கை விரட்ட முற்படவேயில்லை. இங்கிலாந்து பவுலிங்கை அடித்து ஆட தோனி முயற்சிக்கவே இல்லாதது ரசிகர்களுக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. 59 பந்துகளுக்கு 37 ரன்கள் மட்டுமே எடுத்தார். தோனி இப்போது அடிப்பார், இப்போது அடிப்பார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
தோனியின் மந்தமான ஆட்டத்தால் அதிருப்தியடைந்த ரசிகர்களில் ஒரு பகுதியினர், தோனியை சத்தமிட்டு கிண்டல் செய்து விமர்சித்தனர்.
தோனி மீதான விமர்சனம் தொடர்பாக கருத்து தெரிவித்த கேப்டன் கோலி, தோனி எப்போதெல்லாம் அவரது பாணியில் ஆடமுடியாமல் போகிறதோ அப்போதெல்லாம் விமர்சனங்கள் எழுகின்றன. ஆட்டத்தை வெற்றிகரமாக முடித்துக்கொடுத்தால், சிறந்த ஃபினிஷர் என்று புகழ்பவர்கள், வெற்றிகரமாக முடிக்காவிட்டால் தோனியை தூற்றுகின்றனர். இது துரதிர்ஷ்டவசமானது என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தோனி ஆடிய விதம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய அணியின் உதவி பயிற்சியாளர் சஞ்சய் பங்கார், இந்திய அணி விக்கெட்டுகளை இழந்துகொண்டிருந்த நிலையில், தோனி நிலைத்து நின்று ஆடினார். தோனி அடித்து ஆட முற்படும்போதெல்லாம் இந்திய அணி, ரெய்யா, பாண்டியா என விக்கெட்டுகளை இழந்துகொண்டிருந்தது. அதனால் அவரால் அடித்து ஆடமுடியவில்லை. 40 ஓவர்கள் வரை அவருக்கு பார்ட்னர்ஷிப் அமையவில்லை. கடைசி நேரத்தில் விக்கெட்டுகள் சரியும் போது அடித்து ஆடுவது கடினம். அதனால் தோனி அடித்து ஆடவில்லை. அவர் செய்தது சரிதான் என சஞ்சய் பங்கார் ஆதரவு தெரிவித்துள்ளார்.