புரோ கபடி லீக் தொடரின் 10ஆவது சீசனில் இன்று நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில் புனேரி பல்தான் அணியானது 16 புள்ளிகள் வித்தியாசத்தில் பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
புரோ கபடி லீக் தொடரின் 10ஆவது சீசன் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில், புனேரி பல்தான் மற்றும் பாட்னா பைரேட்ஸ் அணிகள் முதல் அரையிறுதிப் போட்டியிலும், ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸ் மற்றும் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் 2ஆவது அரையிறுதிப் போட்டியிலும் விளையாடி வருகின்றன.
இதில், தற்போது ஹைதராபாத்தில் நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில் 3 முறையில் சாம்பியனான பாட்னா பைரேட்ஸ் மற்றும் புனேரி பல்தான் அணிகள் மோதின. இதில், ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய புனேரி பல்தான் அணி வீரர்கள் அடுத்தடுத்து புள்ளிகள் பெற்று அணியை முன்னிலை படுத்தினர். அஷ்லாம் முஷ்தாபா, அபினேஷ் நடராஜன், சங்கத் சவாத், மோகித் கயாத், பங்கஜ் மோகித் ஆகியோர் புனேரி பல்தான் அணிக்கு புள்ளிகள் பெற்றுக் கொடுத்தனர். இறுதியாக புனேரி பல்தான் 37 புள்ளிகள் பெற்றது.
இதே போன்று சச்சின், பாபு, மஞ்சீத், சுதாகர், சப்ஸ்டிடியூட் வீரர் சந்தீப் குமார் ஆகியோர் அடுத்தடுத்து புள்ளிகள் பெற்றனர். இறுதியாக பாட்னா பைரேட்ஸ் அணி 21 புள்ளிகள் மட்டுமே பெற்றது. இதன் மூலமாக 16 புள்ளிகள் வித்தியாசத்தில் புனேரி பல்தான் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.
ஏற்கனவே புனேரி பல்தான் அணியானது விளையாடிய 22 போட்டிகளில் 17 வெற்றி, 2ல் தோல்வி அடைந்து 3 போட்டிகளில் டிரா உடன் மொத்தமாக 96 புள்ளிகள் பெற்று நேரடியாக அரையிறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருந்தது. பாட்னா பைரேட்ஸ் அணியானது 22 போட்டிகளில் 11ல் வெற்றி, 8ல் தோல்வி, 3 டிராவுடன் புள்ளிப்பட்டியலில் 69 புள்ளிகளுடன் 6ஆவது இடம் பிடித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜம்மு-காஷ்மீர் தெருக்களில் கிரிக்கெட் விளையாடிய சச்சின் டெண்டுல்கர்!
