உங்ககூட பேசுறதே எனக்கு பெருமைதான்!காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற வீரர், வீராங்கனைகளிடம் பிரதமர் மோடி நெகிழ்ச்சி
காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியாவிற்கு பதக்கம் வென்று பெருமை சேர்த்த வீரர்கள், வீராங்கனைகளுக்கு தனது இல்லத்தில் விருந்தளித்த பிரதமர் நரேந்திர மோடி, அவர்களுடன் பேசுவதே தனக்கு மிக பெருமையாக இருப்பதாக கூறினார்.
இந்தியா 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் வேளையில், இந்திய விளையாட்டு வீரர்கள் காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளிலும், சர்வதேச செஸ் ஒலிம்பியாட் தொடரிலும் அபாரமாக விளையாடி பதக்கங்களை குவித்தனர்.
பர்மிங்காமில் நடந்த 22வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்திய வீரர்கள், வீராங்கனைகள் அபாரமாக விளையாடி மொத்தமாக 61 பதக்கங்களை இந்தியாவிற்கு குவித்து கொடுத்தனர்.
குறிப்பாக பளுதூக்குதல், பாக்ஸிங், மல்யுத்தம், பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ் ஆகிய போட்டிகளில் அபாரமாக விளையாடி பதக்கங்களை குவித்தனர். லான் பௌல்ஸ், தடகளம் ஆகிய விளையாட்டுகளிலும் பதக்கம் வென்றனர். 22 தங்கம், 16 வெள்ளி மற்றும் 23 வெண்கலம் என மொத்தம் 61 பதக்கங்களை வென்றனர்.
இதையும் படிங்க - இந்தியா - பாகிஸ்தான் போட்டியில் மட்டுமல்ல; ஆசிய கோப்பையையும் இந்த அணி தான் வெல்லும்.! ரிக்கி பாண்டிங் அதிரடி
இந்நிலையில், காமன்வெல்த்தில் பதக்கம் வென்ற வீரர்கள், வீராங்கனைகளை தனது இல்லத்திற்கு அழைத்து விருந்து கொடுத்து கௌரவப்படுத்தினார் பிரதமர் நரேந்திர மோடி.
அந்த விருந்தின்போது விளையாட்டு வீரர், வீராங்கனைகள் மத்தியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உங்களது பல்வேறு பணிகளுக்கு மத்தியில் நேரம் ஒதுக்கி இந்த விருந்துக்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி. உங்களுடன் பேசுவது ஒவ்வொரு இந்தியனுக்கும் எப்படி பெருமையாக இருக்குமோ, அப்படித்தான் எனக்கும் பெருமையாக இருக்கிறது. நாம் அனைவரும் ஒரே குடும்பம் என்பதை இந்த நிகழ்வு நமக்கு உணர்த்துகிறது.
நாடு 75வது சுதந்திர தினத்தை கொண்டாடும் இந்த தருணத்தில் உங்களது கடின உழைப்பின் மூலம் நாட்டிற்கு பதக்கங்களை வென்று கொடுத்து பெருமை தேடி தந்திருக்கிறீர்கள். காமன்வெல்த் மற்றும் சர்வதேச செஸ் ஒலிம்பியாட் ஆகிய இருபெரும் விளையாட்டு தொடர்களில் நமது வீரர்கள், வீராங்கனைகள் மிகப்பெரிய சாதனைகளை நிகழ்த்தி நாட்டை பெருமைப்பட வைத்திருக்கிறீர்கள்.
இதையும் படிங்க - காமன்வெல்த் போட்டிகள்: இந்திய வீரர்கள், வீராங்கனைகள் வென்ற மொத்த பதக்கங்களின் பட்டியல்..!
கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில், இந்தியா புதிதாக 4 விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களை வென்றிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. இது இளம் விளையாட்டு வீரர்களுக்கு உத்வேகம் அளிக்கும் என பிரதமர் மோடி உரையாற்றினார்.