IND vs NZ | சபாஷ் ரஹானே !! டாஸ் வென்று இந்தியா பேட்டிங்... சரியான அணித் தேர்வு..
IND vs NZ | ஒரு பக்கம் இந்திய அணியில் விராட் கோலி, ரிஷப் பண்ட்,பும்ப்ரா, ஷமி இல்லை.. அந்தப் பக்கம் நியூஸி. வில்லியம்சன், ராஸ் டெய்லருடன் பலமாகக் களமிறங்குகிறது.
நியூஸிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் அஜிங்க்ய ரஹானே டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். எதிர்பார்த்ததைப் போலவே இந்திய அணி இரண்டு இரண்டு வேகப்பந்து வீச்சாளர்கள், மூன்று சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியுள்ளது. இளம் முகமது சிராஜுக்கு பதிலாக இந்தப் போட்டியில் உமேஷ் யாதவின் அனுபவத்தின் மேல் நம்பிக்கை வைத்து வாய்ப்பு வழங்கியுள்ளது இந்திய அணி. அதே நேரம் பேட்டிங்கில், ஸ்ரேயஸ் ஐயர் தனது முதல் டெஸ்டை விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளார். டி20 போட்டிகளில் தடம் பதித்த ஸ்ரேயஸ் டெஸ்டில் ஜொலிப்பாரா என்பதைப் பொருந்திருந்து பார்க்க வேண்டும்.
இந்திய அணி - ஷுப்மன் கில், மயங்க் அகர்வால், புஜாரா, ரஹானே (கேப்டன்), ஸ்ரேயஸ் ஐயர், சாஹா (விக்கெட் கீப்பர்), ரவீந்த்ர ஜடேஜா, அஷ்வின், அக்ஸர் படேல், இஷாந்த் ஷர்மா, உமேஷ் யாதவ்
விராட் கோலி, ரிஷப் பண்ட், ஷமி, பும்ப்ரா போன்ற நட்சத்திரங்கள் இல்லாமல் களமிறங்கியிருக்கும் இந்திய அணிக்கு இது முக்கியமான டெஸ்ட். ராகுல் டிராவிடுக்கு இது பயிற்சியாளராக முதல் டெஸ்ட் போட்டி. விராட் கோலியின் தலைமேல் மணி மகுடமாக இருந்த கேப்டன்ஸி வருக்கு முள் கிரீடமாக மாறியுள்ளது. இந்த நிலையில் அஜிங்க்ய ரஹானேவுக்கு தன் கேப்டன்ஸி திறன்களை நிரூபிக்க இது நல்ல வாய்ப்பு. சுழற் பந்துவீச்சிற்கு சாதகமாகவே இந்திய ஆடுகளங்கள் இருக்கும் என்பது ஊரரிந்த விஷயம். ஆனால் டெஸ்ட் தரத்தில் இந்திய விக்கெட்டுகள் இல்லை என்ற குற்றச்சாட்டு, இந்தப் போட்டி 5 நாட்கள் நீடிக்குமா என்பதில் தெரிந்துவிடும். போட்டி தொடங்குவதற்கு முன்பு பிட்ச் திடமானதாக உள்ளதாகவும், 4 மற்றும் 5ம் நாள் அதிகம் திரும்பும் விதத்தில் சர்வதேச தரத்தில் உள்ளதாகவும் கூறியுள்ளனர். எப்படியோ, இந்த பிட்சில் நான்காவதாக பேட்டிங் செய்யும் அணிக்கு சிக்கல்கள் நிச்சயம். ஆக முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கே வெற்றி வாய்ப்பு என்பதால் ரஹானே டாஸ் வென்றது இந்தியாவிற்கு அனுகூலமாயிற்று.
நியூஸிலாந்து அணி - டாம் லாதம், வில் யங்க், கேன் வில்லியம்சன் (கேப்டன்), ராஸ் டெய்லர், நிக்கோல்ஸ், ஹென்ரி (விக்கெட் கீப்பர்), ரச்சின் ரவீந்த்ரா, டிம் சவுதீ, அஜாஸ் படேல், ஜேமிஸன், சோமர்வில்லெ
வில்லியம்சன், ராஸ் டெய்லரின் வருகை நியூஸிலாந்துக்கு பலம் சேர்த்துள்ளது. பந்துவீச்சில் ஜேமிசன் இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கடினமான சவால்களைக் கொடுப்பார். காரணம் அவரது உயரம் மற்றும் ஐ.பி.எல்லால் கிடைத்த இந்திய ஆடுகள அனுபவம். இந்திய பேட்ஸ்மேன்கள் எப்போதுமே உயரமான வேகப்பந்து வீச்சாளர்களிடம் விக்கெட்டுகளை தாரை வார்க்கும் பழக்கமுள்ளவர்கள். ஜேமிசன் இதற்கு முந்தைய தொடர்களிலும் இந்திய வீரர்களை திக்குமுக்காட செய்துள்ளார். ஆனால் போல்ட் இல்லாதது நியூஸிலாந்திற்கு இழப்பு. முதல் நாளான இன்றைய மதிய இடைவேளை வரையில் ஒன்றிரண்டு விக்கெட்டுகளுக்குள் தாக்குப் பிடித்துவிட்டால் இந்தியாவின் வெற்றி உறுதி எனலாம்.
சுவாரஸ்யமான விஷயமாக இன்றைய போட்டியில் முதன் முறையாக டெஸ்ட் களம் காண்கிறார் நியூஸிலாந்தின் ரச்சின் ரவீந்த்ரா. இவரது பெற்றோர் வேலைக்காக இந்தியாவிலிருந்து சென்று அங்கு குடியேறியவர்கள். ராகுல் டிராவிட், சச்சின் ஆகியோரின் தீவிர ரசிகரான இவரது தந்தை இவருக்கு ராகுலின் “ர” மற்றும் சச்சினின் “ச்சின்” சேர்த்து ரச்சின் என்று பெயர் வைத்தாராம்!!