எதிரணி வீரர்களையும் வியக்கவைத்த சம்பவம்.. களத்தில் நேர்மையாக நடந்துகொண்டது ஏன்..? 15 ஆண்டுகளுக்கு பிறகு கில்கிறிஸ்ட் சொன்ன ரகசியம்
கிரிக்கெட் விளையாட்டின் ஜெண்டில்மேன்களாக கருதப்படும் வெகு சிலரில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் ஆடம் கில்கிறிஸ்ட்டும் ஒருவர்.
கள நடுவர் முடிவை சொல்வதற்கு முன்பாகவோ அல்லது நடுவர் அவுட் சொல்ல மறுத்துவிட்டாலோ, தன்னளவில் அது அவுட் என அறிந்தால் நடுவரின் முடிவை பற்றி கவலைப்படாமல் களத்தை விட்டு வெளியேறிவிடுவார் கில்கிறிஸ்ட்.
இதுமாதிரி பல தருணங்களில் நடந்துள்ளது. மிகவும் நேர்மையாக நடந்துகொள்வதால்தான் கிரிக்கெட் விளையாட்டின் ஜெண்டில்மேனாக அறியப்படுகிறார்.
2003 உலக கோப்பை தொடரில் இலங்கைக்கு எதிரான அரையிறுதி போட்டியில் அரவிந்த் டி சில்வா வீசிய பந்தை கில்கிறிஸ்ட் அடிக்க, அதை விக்கெட் கீப்பர் சங்ககரா கேட்ச் பிடிப்பார். பந்து மட்டையில் பட்டதா? கால்காப்பில் பட்டதா? என்பது தெளிவாக தெரியாது. இலங்கை வீரர்கள் நடுவரிடம் அப்பீல் செய்வர். ஆனால் நடுவர் அவுட் தரமாட்டார். அது மட்டையில் பட்டது என்பதை அறிந்த கில்கிறிஸ்ட், நடுவரின் முடிவை எதிர்பார்க்காமல், களத்தை விட்டு வெளியேறிவிடுவார்.
கில்கிறிஸ்ட்டின் இந்த நேர்மை கிரிக்கெட் ரசிகர்களை மட்டுமல்லாமல், மற்ற அணிகளின் வீரர்களையும் கவர்ந்தது. இந்த சம்பவம் நடந்து 15 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், அதற்கு என்ன காரணம் என்பதை தற்போது விளக்கியுள்ளார் கில்கிறிஸ்ட்.
இதுதொடர்பாக ஸ்போர்ட்ஸ் சேனல் ஒன்றில் பேசிய கில்கிறிஸ்ட், ஒரு போட்டியில் ஒரு லெக் ஸ்பின்னர்(பெயரை குறிப்பிடவில்லை) எனக்கு பந்துவீசினார். நான் அதை கட் ஷாட் அடிக்க முயல, பந்து மட்டையில் பட்டு கீப்பர் கேட்ச் பிடித்தார். பந்து மட்டையில் பட்ட சத்தம் நன்றாக கேட்டது. எனக்கும் அது அவுட் என தெரியும். வீரர்கள் அனைவரும் நடுவரிடம் பெரும் சத்தத்துடன் அப்பீல் செய்தனர்; ஆனால் நடுவர் அவுட் வழங்கவில்லை. நடுவர் அவுட் கொடுக்காதது எனக்கே ஆச்சரியமாக இருந்தது. ஏனெனில் அந்தளவிற்கு சத்தம் கேட்டது. இவ்வளவும் நடக்க, எனக்கு பந்துவீசிய பவுலர், கூச்சலிட்டு கத்தியும் அப்பீல் செய்யவில்லை. நடுவர் மறுப்பு தெரிவித்ததும் பெரிதாகவும் எடுத்துக்கொள்ளவில்லை.
அதன்பிறகு நான் தொடர்ந்து ஆடி சதமடித்துவிட்டேன். போட்டி முடிந்ததும் அந்த பவுலர் என்னிடம் வந்து, சிறப்பாக ஆடினீர்கள் என்று பாராட்டினார். எனக்கு சங்கடமாகிவிட்டது. அது அவுட் தான், மன்னித்துவிடுங்கள் என்றேன். ஆனால் அவர் என்னிடம் கவலைப்படாதீர்கள்; இந்த தருணம் என்னைவிட உங்களுக்கு தான் மிக முக்கியமானது என வாழ்த்து தெரிவித்துவிட்டு சென்றார். அவரது அந்த செயல், என் நெஞ்சில் ஈட்டியை பாய்ச்சியது போன்று இருந்தது. அந்த சம்பவத்தை என்னால் மறக்கவே முடியாது. அன்று முடிவு செய்தேன்; அவுட் என நமக்கு தெரிந்தால், நடுவரின் முடிவை பற்றி கவலைப்படாமல் நேர்மையாக வெளியேறிவிட என்று.. அதைத்தான் செய்தேன் என கில்கிறிஸ்ட் விளக்கமளித்துள்ளார்.
கில்கிறிஸ்ட்டின் இந்த விளக்கம், ரசிகர்களுக்கு அவர் மீது ஏற்கனவே இருக்கும் மதிப்பை அதிகப்படுத்தியுள்ளது.