தமிழகம் தான் என் பயிற்சிக் களம்.. - தங்கம் வென்ற தமிழ்மகள் இளவேனில் வாலறிவன் நெகிழ்ச்சி!!
உலகக்கோப்பை துப்பாக்கிச் சுடும் போட்டியில் தங்க பதக்கம் வென்று சாதனை படைத்திருக்கிறார் தமிழகத்தைச் சேர்ந்த இளவேனில் வாலறிவன்.
ISSF எனப்படும் International Shooting Sport Federation (பன்னாட்டு துப்பாக்கிச் சூட்டு விளையாட்டு அமைப்பு) நடத்தும் உலகக் கோப்பைப் போட்டிகள் பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனேரியோ நகரில் நடந்தது. பல்வேறு நாடுகள் கலந்து கொண்ட இந்த போட்டியில் இந்தியாவில் இருந்து தமிழகத்தைச் இளவேனில் வாலறிவனும் கலந்து கொண்டார்.
இதில் 10 மீட்டர் துப்பாக்கி சுடும் போட்டியில் பங்குபெற்ற இவர் முதலிடம் பிடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றார். பிரித்தானியாவைச் சேர்ந்த மெக்கின்டோஷ் சியோனைட் இரண்டாமிடத்தில் வெள்ளிப்பதக்கத்தையும் தைவானைச் சேர்ந்த லின் யிங்-ஷின் மூன்றாமிடத்தையும் பிடித்தனர்.
இந்த நிலையில் தமிழகத்தின் கடலூரைச் சேர்ந்தவரான இளவேனில், தற்போது குஜராத்தில் வசித்து வருகிறார். தான் வெற்றி பெற்றது குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அவர் தனது பெற்றோருக்கு தங்கப்பதக்கத்தை அர்பணிப்பதாக கூறினார். மேலும் அடுத்து சீனாவில் நடைபெற இருக்கும் உலகக்கோப்பை போட்டியில் தங்கம் வெல்வது தான் தனது இலக்கு என்று கூறிய அவர் தமிழகத்தில் தான் பயிற்சி பெற்றதாக நெகிழ்ச்சியோடு கூறினார்.
20 வயதான இளவேனில் வாலறிவன் சீனியர் உலகக்கோப்பை போட்டியில் பங்கேற்ற முதல் ஆண்டிலேயே தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.