ட்ரோன் ஒலிம்பிக்கில் 3 பிரிவுகளில் வெற்றி பெற்ற அஜித் டீம்!! அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராட்டு...
விமான கண்காட்சி மற்றும் ட்ரோன் ஒலிம்பிக்கில் 3 பிரிவுகளில் நடிகர் அஜித் தொழில்நுட்ப ஆலோசகராக இருக்கும் மாணவர்கள் குழுவான ''தக்க்ஷா'' குழு வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.
சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் ''தக்க்ஷா'' மாணவர்கள் குழுவாக இணைந்து ஆளில்லாத விமானங்கள் மற்றும் ட்ரோன்கள் போன்றவை தொழில்நுட்ப முறையில் தயாரித்து பல்வேறு உலக நாடுகளில் நடந்த சில போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி வாகை சூடி வருகின்றனர்.
இந்நிலையில், பெங்களூரில் நடைபெற்ற ''ஏரோ இந்தியா 2019'' விமானம் மற்றும் ட்ரோன் ஒலிம்பிக் என்ற பெயரில் முதல் முறையாக நடந்த போட்டியில் "தக்க்ஷா" மாணவர்கள் குழு வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் மாணவர் குழு தயாரித்த "ஆளில்லா விமானங்கள்" மற்றும் ட்ரோன்கள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டு செயல்முறை காட்டப்பட்டன.
5 பிரிவுகளில் நடத்தப்பட்ட இந்த போட்டியில் 4 கிலோவுக்கும் அதிகமான கண்காணிப்புப் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பிடித்து 1.5 லட்சம் பரிசுத் தொகையை கைப்பற்றியது அஜித் டீம் . மேலும் 4 முதல் 20 கிலோ எடையிலான கண்காணிப்புப் பிரிவில் முதலிடத்தை பிடித்து 3 லட்சம் பரிசை வென்றது. அதேபோல பறக்கும் தொழில்நுட்ப சவால் பிரிவில் 2 இடத்தை தக்கவைத்து 3 லட்சம் வாங்கியது. இப்படி மொத்தம் 7 லட்சம் ரூபாய் பரிசு தொகையை வென்றுள்ளது.
ஹைபிரிட் கண்காணிப்பு பிரிவில் தங்கப்பதக்கம் வென்று அசத்தி வெற்றி வாகை சூடிய தக்க்ஷா குழுவினருக்கு நாடு முழுவதிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வரும் நிலையில், இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராட்டு தெரிவித்துள்ளார்.