முதல் முறையாக இந்தியாவுக்கு எதிராக 200 ரன்களுக்கு மேல் அடித்த இலங்கை!
இந்தியாவுக்கு எதிரான 2ஆவது டி20 போட்டியில் இலங்கை அணி முதல் முறையாக 200 ரன்களுக்கு மேல் அடித்துள்ளது.
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இலங்கை அணி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் முதலில் விளையாடி வருகிறது. ஏற்கனவே நடந்து முடிந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இரு அணிகளுக்கு இடையிலான 2ஆவது டி20 போட்டி நேற்று புனே மைதானத்தில் நடந்தது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்திக் பாண்டியாக பீல்டிங் தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் ஆடிய இலங்கை அணி அதிரடியாக ஆடியது. 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் குவித்தது. இந்திய அணி சார்பில் உம்ரான் மாலிக் 3 விக்கெட்டுகளும், அக்ஷர் படேல் 2 விக்கெட்டுகளும், சகால் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர். பின்னர், கடின இலக்கை துரத்திய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி தான். தொடர்க்க வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இந்திய அணி 9.1 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 57 ரன்கள் எடுத்து தத்தளித்தது.
ஒருநாள் உலக கோப்பையை ஜெயிக்கணும்னா இதை பண்ணுங்க..! இந்திய அணிக்கு கம்பீர் உருப்படியான அட்வைஸ்
அதன் பின்னர் சூர்யகுமார் யாதவ் மற்றும் அக்ஷர் படேல் ஜோடி இலங்கை அணி பந்து வீச்சை துவம்சம் செய்தது. இவரும் சிக்சரும், பவுண்டரியுமாக விளாசி தள்ளினர். ஹசரங்காவின் ஒரே ஓவரில் அக்ஷர் படேல் ஹாட்ரிக் சிக்சர் அடித்தார். சூர்யகுமார் யாதவ் 51 ரன்களில் வெளியேற, அக்ஷர் படேல் 65 ரன்களில் ஆட்டமிழந்தார். ஷிவம் மாவி தன் பங்கிற்கு 2 சிக்சர், 2 பவுண்டரி உள்பட 26 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இறுதியாக இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 190 ரன்கள் மட்டுமே எடுத்து 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது. அதுமட்டுமின்றி 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரையும் இலங்கை அணி தற்போது 1-1 என்ற கணக்கில் சமநிலை செய்துள்ளது.
இந்த நிலையில், கடந்த 2010 ஆம் ஆண்டு ஜனவரிக்குப் பிறகு இந்தியாவுக்கு எதிரான டி20 போட்டிகளில் இலங்கை அணி 200 ரன்களுக்கு மேல் எடுத்தது இதுவே முதல் முறையாகும். அதுமட்டுமின்றி இலங்கை அணியின் கேப்டன் அதிவேகமாக அரைசதம் அடித்தவர்கள் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளார். 20 பந்துகளில் அரைசதம் அடித்துள்ளார். இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு 19 பந்துகளில் கேமரூன் க்ரீக் அரைசதம் அடித்திருந்தார். கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கை அணியின் முன்னாள் வீரர் குமார் சங்ககாரா 21 பந்துகளில் அரைசதம் அடித்திருந்தார்.
இவ்வளவு ஏன், ஒரு கேப்டனாக தசுன் ஷனாகா கடந்த 5 டி20 போட்டிகளில் இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாடியுள்ளார். 19 பந்துகளில் 47 ரன்கள் நாட் அவுட், 38 பந்துகளில் 74 ரன்கள் நாட் அவுட், 18 பந்துகளில் 33 ரன்கள் நாட் அவுட், 27 பந்துகளில் 45 ரன்கள் நாட் அவுட், 22 பந்துகளில் 56 ரன்கள் நாட் அவுட் என்று மொத்தமாக இந்தியாவுக்கு எதிராக கடைசி 5 டி20 போட்டிகளில் 255 ரன்கள் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.