இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில், ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 3,000 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். தனது 62வது இன்னிங்ஸில் இந்த மைல்கல்லை எட்டிய அவர், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 84 ரன்கள் அடித்து இந்தியாவின் வெற்றிக்கு உதவினார்.

சுப்மன் கில் புதிய சாதனை!

இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணியின் கேப்டன் சுப்மன் கில், ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு புதிய மைல்கல்லை எட்டியிருக்கார். அதிவேகமாக 3,000 ரன்களை கடந்த வீரர்கள் பட்டியலில் அவர் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். தனது 62வது இன்னிங்ஸில் கில் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

சனிக்கிழமை தரம்சாலாவில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நடந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்த சாதனை படைக்கப்பட்டது. இந்தப் போட்டியில் கில், 66 பந்துகளில் 84 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் எட்டு பவுண்டரிகளும், இரண்டு சிக்ஸர்களும் அடங்கும். இவரின் சிறப்பான ஆட்டத்தால், மழையால் பாதிக்கப்பட்ட இந்தப் போட்டியில் இந்தியா ஏழு விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வெற்றி பெற்றது. போட்டியின் 13வது ஓவரில் கில் 3,000 ரன்களை கடந்தார். தற்போது 62 ஒருநாள் இன்னிங்ஸ்களில் அவர் 3,037 ரன்கள் எடுத்துள்ளார்.

ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 3,000 ரன்களை எட்டியவர்கள் பட்டியலில் தென்னாப்பிரிக்காவின் முன்னாள் வீரர் ஹசிம் அம்லா முதலிடத்தில் உள்ளார். அவர் வெறும் 57 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை செய்திருந்தார். கில்லுக்கு அடுத்தபடியாக, வெஸ்ட் இண்டீஸின் ஷாய் ஹோப், பாகிஸ்தானின் ஃபக்கர் ஜமான் மற்றும் இமாம்-உல்-ஹக் ஆகியோர் உள்ளனர். இவர்கள் மூவரும் 67 இன்னிங்ஸ்களில் 3,000 ரன்களை எட்டினர்.

முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி

இந்தியா vs ஆப்கானிஸ்தான் முதல் ஒருநாள் போட்டியில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, தொடரில் 1-0 என முன்னிலை வகிக்கிறது.

ஆப்கானிஸ்தான் பேட்டிங்

மழை காரணமாக போட்டி தலா 25 ஓவர்களாக குறைக்கப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் அணி, 24.5 ஓவர்களில் 194 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி சார்பில் அறிமுக வீரர்களான குர்னூர் பிரார் மற்றும் ஹர்ஷ் துபே தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினர். ஆப்கானிஸ்தான் சார்பில், ரஹ்மானுல்லா குர்பாஸ் வெறும் 51 பந்துகளில் 102 ரன்கள் விளாசினார். அவரும், கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாஹிதியும் (27) நான்காவது விக்கெட்டுக்கு 116 ரன்கள் சேர்த்தனர். ஆனால், குர்பாஸ் ஆட்டமிழந்த பிறகு, ஆப்கானிஸ்தான் அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்ததால், பெரிய ஸ்கோரை எட்ட முடியவில்லை.

இந்தியாவின் சேஸிங்

195 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு சுப்மன் கில் முதுகெலும்பாக இருந்தார். அவர் 66 பந்துகளில் 84 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இஷான் கிஷன் 34 ரன்களும், கே.எல். ராகுல் வெறும் 19 பந்துகளில் 39 ரன்களும் விளாசினர். கில் மற்றும் ராகுல் ஜோடி, கடைசி வரை ஆட்டமிழக்காமல் 53 ரன்கள் சேர்த்து, 22.5 ஓவர்களிலேயே இந்தியாவை வெற்றிக்கு அழைத்துச் சென்றது.