துபாயில் நடந்து வரும் ஐபில் 2024 ஏலத்தில் ஆல்ரவுண்டரான ஷர்துல் தாக்கூரை ரூ.4 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் நடக்கும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசனுக்கான ஏலம் தற்போது துபாயில் உள்ள கோகோ கோலா அரேனா அரங்கத்தில் நடந்து வருகிறது. ஐபிஎல் சேர்மன் அருண் துமல் தொடக்க உரையாற்றி இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். முதல் முறையாக ஆண்களுக்கான ஐபிஎல் ஏலத்தை மல்லிகா சாகர் நடத்துகிறார்.
இந்த ஏலத்தின் முதல் வீரராக வெஸ்ட் இண்டீஸ் வீரரான ரோவ்மன் பவல் ரூ.7.40 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சார்பில் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். டெல்லி கேபிடல்ஸ் அணியில் ஹாரி ஃப்ரூக் ரூ.4 கோடிக்கு வாங்கப்பட்டார். அடுத்ததாக டிராவிஸ் ஹெட்டை ரூ.6.80 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஏலத்தில் எடுத்துள்ளது. இந்த நிலையில் தான் உலகக் கோப்பை 2023 தொடரில் சிறப்பாக விளையாடிய நியூசிலாந்து அணியின் ஆல்ரவுண்டரான ரச்சின் ரவீந்திராவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது ரூ.1.80 கோடிக்கு வாங்கியது. இவரைத் தொடர்ந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியிலிருந்து விடுவிக்கப்பட்ட ஷர்துல் தாக்கூரை மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது பக்கம் இழுத்துக் கொண்டது. அவர் ரூ.4 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
IPL Auction 2024, Rovman Powell: முதல் வீரராக ரூ.7.40 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்ட ரோவ்மன் பவல்!
இதற்கு முன்னதாக கடந்த ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் ரூ.10.75 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு விளையாடிய ஷர்துல் தாக்கூர் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2021 ஆம் ஆண்டு வரையில் சிஎஸ்கே அணிக்காக ரூ.2.60 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டு விளையாடி வந்துள்ளார். 2022 ஆம் ஆண்டு டெல்லி கேபிடல்ஸ் அணியில் ரூ.10.75 கோடிக்கு விளையாடினார். இந்த நிலையில் தான் தற்போது மீண்டும் சென்னை அணிக்கு ரூ.4 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.
