சாம்பியன்ஸ் டிராபி 2025க்கு இந்தியா, பாகிஸ்தானுக்கு வர மறுத்தால் இழப்பீடு வழங்க வேண்டும் – பாகிஸ்தான் வாரியம்!
சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரை நடத்தும் உரிமையில் ஐசிசி கையெழுத்திடுமாறு பாகிஸ்தான் வலியுறுத்தி வரும் நிலையில், இந்தியா, பாகிஸ்தானுக்கு வர மறுத்தால் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வலியுறுத்தியுள்ளது.
![PCB urges ICC to sign rights to host Champions Trophy 2025 in Pakistan rsk PCB urges ICC to sign rights to host Champions Trophy 2025 in Pakistan rsk](https://static-ai.asianetnews.com/images/01en0gvjzwhas23xek9btzk6bs/pcb-icc-jpg_363x203xt.jpg)
நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரானது முதல் முறையாக 1998 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. கடைசியாக 2017 ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடந்தது. இந்த தொடரில் பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்தும் வரும் 2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் நடத்துவதாக இருந்தாலும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி முக்கியமான ஹோஸ்டிங் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உரிமை கோரியது.
ஆனால், அரசியல் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தானிற்கு பயணம் செய்ய இந்தியா மறுப்பு தெரிவிக்கும் பட்சத்தில் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியது. என்னதான் சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் நடத்துவதாக இருந்தாலும், உலகளாவிய அமைப்பு அதனுடன் முக்கியமான ஹோஸ்டிங் ஒப்பந்தத்தில் இன்னும் கையெழுத்திடவில்லை. இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஜகா அஷ்ரஃப் மற்றும் முதன்மை நிர்வாக அதிகாரி சல்மான் நசீர் ஆகியோர் அகமதாபாத்தில் உள்ள ஐசிசி நிர்வாகக் குழுவைச் சந்தித்து 2025 பிப்ரவரி-மார்ச் மாதங்களில் சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தானில் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) மீண்டும் தனது அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப மறுப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பாகிஸ்தான் அதிகாரிகள் விவாதித்தனர். அதோடு, எந்தவொரு சூழ்நிலையிலும் ஐசிசி போட்டியில் ஒருதலைப்பட்சமான முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று தெளிவுபடுத்தினர்.
பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தானில் விளையாட இந்தியா மறுத்தால், சர்வதேச அமைப்பு ஒரு சுதந்திரமான பாதுகாப்பு நிறுவனத்தை நியமிக்க வேண்டும் என்று பிசிபி அதிகாரிகள் ஐசிசியிடம் கூறியதாக சொல்லப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் பல சர்வதேச அணிகள் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடி இருந்தாலும், இந்தியா மட்டும் பாகிஸ்தானுக்கு வரவில்லை. ஆசிய கோப்பைக்கு கூட இந்திய அணி பாகிஸ்தான் வரவில்லை.
இலங்கையில் தான் போட்டிகள் நடத்தப்பட்டது. ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுடன் ஒப்பந்தம் செய்த போதிலும் பாகிஸ்தானில் 4 போட்டிகள் மட்டுமே நடத்தப்பட்டது. இறுதியாக இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரை நடத்தும் உரிமையிலிருந்து பாகிஸ்தான் ஒரு போதும் பின்வாங்காது என்று பாகிஸ்தான் அதிகாரிகள் கூறியதாக தகவல் தெரிவிக்கின்றது.