WI vs IND: வெஸ்ட் இண்டீஸ் பவுலிங்கை வெளுத்து வாங்கிய சூர்யகுமார் யாதவ்.! 3வது டி20யில் இந்தியா அபார வெற்றி
வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2-1 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் தலா ஒரு வெற்றியை பெற்றிருந்ததால் தொடர் 1-1 என சமனில் இருந்தது. 3வது டி20 போட்டி செயிண்ட் கிட்ஸில் நடந்தது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா ஃபீல்டிங்கை தேர்வு செய்தார். இந்த போட்டிக்கான இந்திய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டது. ஜடேஜாவிற்கு ஓய்வளிக்கப்பட்டு, தீபக் ஹூடா அணியில் சேர்க்கப்பட்டார்.
இதையும் படிங்க - நல்ல வேளை, தினேஷ் கார்த்திக் இந்தியாவில் பிறந்தார்..! பாகிஸ்தானில் பிறந்திருந்தால் அவ்வளவுதான்
இந்திய அணி:
ரோஹித் சர்மா (கேப்டன்), சூர்யகுமார் யாதவ், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, தினேஷ் கார்த்திக், திபக் ஹூடா, ரவிச்சந்திரன் அஷ்வின், புவனேஷ்வர் குமார், அர்ஷ்தீப் சிங், ஆவேஷ் கான்.
வெஸ்ட் இண்டீஸ் அணி:
கைல் மேயர்ஸ், பிரண்டன் கிங், நிகோலஸ் பூரன் (கேப்டன், விக்கெட் கீப்பர்), ரோவ்மன் பவல், ஷிம்ரான் ஹெட்மயர், டெவான் தாமஸ், ஜேசன் ஹோல்டர், அகீல் ஹுசைன், ஒடீன் ஸ்மித், அல்ஸாரி ஜோசஃப், ஒபெட் மெக்காய்
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் கைல் மேயர்ஸ் அபாரமாக பேட்டிங் ஆடி அரைசதம் அடித்தார். மறுமுனையில் மற்ற வீரர்கள் சிறு சிறு பங்களிப்பு செய்து சீரான இடைவெளியில் ஆட்டமிழக்க, ஒருமுனையில் நிலைத்து ஆடி அரைசதம் அடித்த கைல் மேயர்ஸ் 50 பந்தில் 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 73 ரன்களை குவித்து, 17வது ஓவரில் ஆட்டமிழந்தார். இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 164 ரன்கள் அடித்தது.
இதையும் படிங்க - நல்ல பிளேயரை சீரழித்துவிடாதீர்கள்..! ரோஹித்தை விளாசிய ஸ்ரீகாந்த்
165 ரன்கள் என்ற சவாலான இலக்கை விரட்டிய இந்திய அணியில் தொடக்க வீரராக இறங்கி, முதல் 2 போட்டிகளில் சோபிக்காத சூர்யகுமார் யாதவ், இந்த போட்டியில் ஓபனிங்கில் அடி வெளுத்து வாங்கினார். அதிரடியாக ஆடிய சூர்யகுமார் யாதவ் அரைசதம் அடித்தார்.
44 பந்தில் 8 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 76 ரன்களை குவித்தார் சூர்யகுமார் யாதவ். ரிஷப் பண்ட் 26 பந்தில் 33 ரன்கள் அடித்தார். சூர்யகுமார் யாதவின் அதிரடி அரைசதத்தால் 19 ஓவர்களில் இலக்கை அடித்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி 2-1 என தொடரில் முன்னிலை வகிக்கிறது.