பாகிஸ்தான் சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடரை நடத்தவில்லை என்றால், ஹைப்ரிட் மாடல் அல்லது துபாயில் சாம்பியன்ஸ் டிராபி 2025 நடக்க வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
பாகிஸ்தான் நாட்டில் கிரிக்கெட் விளையாட இந்தியா மறுப்பு தெரிவித்தால் ஹைப்ரிட் மாடல் அல்லது துபாயில் சாம்பியன்ஸ் டிராபி 2025 தொடர் நடக்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு முன்னதாக ஆசிய கோப்பை 2023 தொடரை பாகிஸ்தான் நடத்தியது. ஆனால், இந்தியா, பாகிஸ்தான் நாட்டில் கிரிக்கெட் விளையாட மறுப்பு தெரிவித்த நிலையில், இலங்கையில் போட்டிகள் நடத்தப்பட்டது.
அதே போன்று தான் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கும் நடக்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரானது முதல் முறையாக 1998 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. கடைசியாக 2017 ஆம் ஆண்டு இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் நடந்தது. இந்த தொடரில் பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வென்றது. இதையடுத்து வரும் 2025 ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் நடத்துவதாக இருந்தாலும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலான ஐசிசி முக்கியமான ஹோஸ்டிங் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுமாறு, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உரிமை கோரியது.
ஆனால், அரசியல் மற்றும் பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தானிற்கு பயணம் செய்ய இந்தியா மறுப்பு தெரிவிக்கும் பட்சத்தில் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியது. என்னதான் சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் நடத்துவதாக இருந்தாலும், உலகளாவிய அமைப்பு அதனுடன் முக்கியமான ஹோஸ்டிங் ஒப்பந்தத்தில் இன்னும் கையெழுத்திடவில்லை.
இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் ஜகா அஷ்ரஃப் மற்றும் முதன்மை நிர்வாக அதிகாரி சல்மான் நசீர் ஆகியோர் அகமதாபாத்தில் உள்ள ஐசிசி நிர்வாகக் குழுவைச் சந்தித்து 2025 பிப்ரவரி-மார்ச் மாதங்களில் சாம்பியன்ஸ் டிராபியை பாகிஸ்தானில் நடத்துவது குறித்து ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது.
இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) மீண்டும் தனது அணியை பாகிஸ்தானுக்கு அனுப்ப மறுப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து பாகிஸ்தான் அதிகாரிகள் விவாதித்தனர். அதோடு, எந்தவொரு சூழ்நிலையிலும் ஐசிசி போட்டியில் ஒருதலைப்பட்சமான முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று தெளிவுபடுத்தினர்.
பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தானில் விளையாட இந்தியா மறுத்தால், சர்வதேச அமைப்பு ஒரு சுதந்திரமான பாதுகாப்பு நிறுவனத்தை நியமிக்க வேண்டும் என்று பிசிபி அதிகாரிகள் ஐசிசியிடம் கூறியதாக சொல்லப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில் பல சர்வதேச அணிகள் பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடி இருந்தாலும், இந்தியா மட்டும் பாகிஸ்தானுக்கு வரவில்லை. ஆசிய கோப்பைக்கு கூட இந்திய அணி பாகிஸ்தான் வரவில்லை.
இந்த நிலையில், கடைசி வரை இந்திய அணியானது ஒத்து வரவில்லை என்றால், ஹைப்ரிட் மாடல் அல்லது துபாயில் சாம்பியன்ஸ் டிராபி தொடரானது நடத்தப்படும் என்று தகவல் வெளியாகியிருக்கிறது.
மும்பைக்கு போன ஹர்திக் பாண்டியா: குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு கேப்டனாகும் சுப்மன் கில்!
