இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது டெஸ்ட் போட்டியிலிருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகியதைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக தேவ்தத் படிக்கல் சப்ஸ்டிட்டியூட் வீரராக களமிறங்கினார்.
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான 3ஆவது டெஸ்ட் போட்டி தற்போது ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு ரோகித் சர்மா 131 ரன்களும், ரவீந்திர ஜடேஜா 112 ரன்களும், சர்ஃப்ராஸ் கான் 62 ரன்களும், துருவ் ஜூரெல் 46 ரன்களும் எடுத்துக் கொடுக்க 445 ரன்கள் குவித்தது.
பின்னர், முதல் இன்னிங்ஸை விளையாடிய இங்கிலாந்து அணிக்கு ஜாக் கிராவ்லி, பென் டக்கெட் இருவரும் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். இதில், அஸ்வின் செய்த தவறால் இங்கிலாந்து அணி 5 ரன்களுடன் பேட்டிங்கை தொடங்கியது. இதில் தொடக்கம் முதலே இங்கிலாந்து வீரர் பென் டக்கெட் அதிரடியாக விளையாட ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
பும்ரா, சிராஜ், குல்தீப் யாதவ் ஆகியோர் மாறி மாறி பந்து வீசியும் விக்கெட் விழவில்லை. இதையடுத்து ரவிச்சந்திரன் அஸ்வின் 12ஆவது ஓவர் வீசுவதற்கு வரவழைக்கப்பட்டார். இந்த ஓவரில் 3 ரன்கள் கொடுக்க மீண்டும் 14ஆவது ஓவரை அஸ்வின் வீசினார். இந்த ஓவரில் முதல் பந்திலேயே ஜாக் கிராவ்லி விக்கெட்டை கைப்பற்றி டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 500ஆவது விக்கெட்டை கைப்பற்றி புதிய வரலாற்று சாதனை படைத்தார்.
ஒருபுறம் அதிரடியாக விளையாடிய பென் டக்கெட் 88 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்தார். மேலும், ஒரு செஷனில் அதிக ரன்கள் குவித்த முதல் வெளிநாட்டு வீரர் என்ற சாதனையை படைத்தார். 2ஆம் நாள் முடிவில் இங்கிலாந்து 2 விக்கெட் இழப்பிற்கு 207 ரன்கள் குவித்திருந்தது. இதில் டக்கெட் 133 ரன்களுடன் களத்தில் இருந்தார்.
Ashwin 500 – அஸ்வினின் மாயாஜால சுழலுக்கு வாழ்த்துகள் - மு.க.ஸ்டாலின்!
இந்த நிலையில் தான் 3ஆம் நாள் போட்டிக்கு பிறகு அஸ்வின் குடும்ப மெடிக்கல் எமர்ஜென்சி காரணமாக அவசர அவசரமாக வீட்டிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். எஞ்சிய நாட்களில் அவருக்குப் பதிலாக தேவ்தத் படிக்கல் சப்ஸ்டிட்டியூட் வீரராக அணியில் இடம் பெற்றார். மேலும், அஸ்வினுக்கு பதிலாக அவர் பேட்டிங் செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.
