இந்திய அணியின் பயிற்சியாளர்கள் பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம்..! அறிவிப்பை வெளியிட்டது பிசிசிஐ
இந்திய அணியின் பயிற்சியாளர்கள் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது பிசிசிஐ.
2017ம் ஆண்டிலிருந்து இந்திய அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்துவரும் ரவி சாஸ்திரியின் பதவிக்காலம் டி20 உலக கோப்பையுடன் முடிவடைகிறது. இந்திய அணியின் அடுத்த தலைமை பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டை நியமிக்கவுள்ளது பிசிசிஐ. அதற்காக ராகுல் டிராவிட்டுடன் பேசி அவரது ஒப்புதலை பிசிசிஐ பெற்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
பவுலிங் பயிற்சியாளர் பரத் அருண் மற்றும் ஃபீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோரும் அவரவர் வகித்துவரும் பதவிகளிலிருந்து விலகவுள்ளனர். பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் மட்டும் அவரது பதவியில் நீடிப்பார் என்று தெரிகிறது.
இதையும் படிங்க - டி20 உலக கோப்பையை ஜெயிக்க இந்திய அணி என்ன செய்யணும்..? பிசிசிஐ தலைவர் கங்குலி அறிவுரை
இந்நிலையில், பயிற்சியாளர்கள் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. தலைமை பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 26ம் தேதி கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற பயிற்சியாளர்கள் பதவிக்கு நவம்பர் 3ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது. ராகுல் டிராவிட் தலைமை பயிற்சியாளராக பொறுப்பேற்க உள்ளதை போல, பராஸ் மாம்ப்ரே பவுலிங் பயிற்சியாளராக நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.