எருமேலியை கடக்கும் பெரிய பாதை – மகிஷியை அழித்த தர்மசாஸ்தா
ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதமிருந்து சபரிமலை யாத்திரை செல்வார்கள். ஒரு காலத்தில், சபரிமலை ஐயப்பனை தரிசிக்க செல்ல எருமேலியில் இருந்து செல்லும் காட்டுப்பாதை மட்டுமே இருந்தது. இந்தப்பாதையில் சென்று ஐயப்பனை தரிசிப்பதே முறையானதாகும்.
எருமேலியில் ஆரம்பித்து சபரிமலை வரையில் 56 கி.மீ. தூரம் உள்ள இந்த பாதை பெருவழிப்பாதை என அழைக்கப்படுகிறது. இந்த பெருவழிப்பாதை வழியாக சென்றால் உடலும், உள்ளமும் தூய்மையடையும். ஐயப்பனை காணச் சென்ற வழியும் இதுவே ஆகும். இந்தப் பாதை வழியே ஐயப்பனைத் தரிசிப்பதே சிறந்தது என பக்தர்கள் கூறுகின்றனர்.
சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் எல்லோரும் ஒன்று கூடும் இடம் எருமேலி. இங்கு பந்தள மன்னன் ராஜசேகர பாண்டியனால் கட்டப்பட்ட தர்மசாஸ்தா கோயில் உள்ளது. சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்கள், எருமேலியில் இருந்து காட்டுவழி பாதையாக நடந்து செல்வதையே ஆதியில் வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
இந்த வழியிலேயே பந்தளராஜா, மணிகண்டனைக் காண சபரிமலைக்கு சென்றதால், பக்தர்களும் அந்த வழியையே பின்பற்றி வருகிறார்கள். இவ்வழியாக நடந்து சென்றால் உடலும் மனமும் தூய்மை அடைவதை அனுபவபூர்வமாக உணரலாம்.
மணிகண்டன் மகிஷியோடு போரிடும்போது, முதல் அம்பை இங்கிருந்து எய்ததால், அதை நினைவுப்படுத்தும் விதமாக மலைக்கு வரும் பக்தர்கள் நடத்தும் பேட்டைத் துள்ளல் வைபவம், இங்கே விசேஷம். இங்குள்ள சாஸ்தா கோயிலில், வேட்டைக்கு செல்வதுபோல் அம்பும், வில்லும் ஏந்தி நிற்கின்ற உருவில் தர்மசாஸ்தா காட்சியளிக்கிறார்.
எருமேலியில் ஐயப்பனுக்கு 2 கோயில்கள் உள்ளன. மகிஷியின் தலைமை இடமாக கூறப்படும் இந்த எருமேலியில்தான், ஐயப்பன், காட்டுவாசி கோலத்தில் சென்று மகிஷியை வதம் செய்தார். எருமை தலை உடைய மகிஷியை வதம் செய்தாலும், ஊரைச் சுற்றிலும் எருமையைக் கொண்டு வேலி அமைத்ததாலும் இவ்வூருக்கு எருமேலி என்று பெயர் வந்தது.