தமிழகத்தை குறி வைத்துள்ள ஆர்எஸ்எஸ்.! இங்கு வேலைக்கு ஆகாது... வாலை சுருட்டிக் கொள்ளனும்-இறங்கி அடிக்கும் திருமா
இந்து அல்லாதவர்களை அந்நியர்கள் என்கிற வெறுப்பை விதைக்கிறது. இது மிக ஆபத்தான அரசியல், இந்த ஆபத்தில் இருந்து தமிழகம் பாதுகாப்பாக இருந்தது, ஆனால் இப்போது தமிழ்நாட்டை குறிவைத்து விட்டதாக திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தை குறி வைத்த ஆர்எஸ்எஸ்
காமராஜரின் 48வது நினைவு தினத்தையொட்டி சென்னை கிண்டியில் உள்ள அவரது நினைவகத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், கட்சி நிர்வாகிகளுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன், காமராஜர் நினைவு நாளில், சனாதன அரசியலை தமிழகத்தில் ஒரு நாளும் நுழைய விட மாட்டோம் என விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுதி ஏற்கிறது என தெரிவித்தார். பயங்கரவாத அணுகுமுறை அரசியலை கொண்ட இயக்கம் தான் ஆர் எஸ் எஸ். அது கலாச்சார இயக்கம் என்ற போர்வையில் இயங்கி கொண்டிருக்கிறது.
ஷகா என்கிற பெயரில் ஆயுத பயிற்சி வழங்குகிறார்கள், மக்களுக்கு தொண்டு செய்வதை விட வன்முறையைத்தான் ஆர்எஸ்எஸ் தூண்டி வருகிறது. இந்து அல்லாதவர்களை அந்நியர்கள் என்கிற வெறுப்பை விதைக்கிறது. இது மிக ஆபத்தான அரசியல், இந்த ஆபத்தில் இருந்து தமிழகம் பாதுகாப்பாக இருந்தது, ஆனால் இப்போது தமிழ்நாட்டை குறிவைத்து விட்டதாக கூறினார்.
தடை விதிக்கப்பட்ட இயக்கம் ஆர்எஸ்எஸ்
ஆர் எஸ் எஸ் நடத்த இருந்த பேரணி நடத்துவதாக அறிவித்த அன்று ஜனநாயக சக்திகள் மனித சங்கிலி போராட்டத்தை நடத்த அறிவித்தோம். ஆனால், காவல்துறை பொத்தாம் பொதுவாக யாருக்கும் அனுமதி இல்லை என கூறியது. வரும் 11 ஆம் தேதி சமூக நல்லிணக்க மனித சங்கிலி, திட்டமிட்டபடி நடைபெறும் என நம்புகிறோம். இந்த மண் காமராஜர் போன்றவர்களால், பண்படுத்தப்பட்ட மண், இந்த மண்ணில் சனாதன அரசியலுக்கு இடமில்லை என்பதை உணர்த்த இந்த அறப்போர் நடைபெறும். அனைத்து ஜனநாயக சக்திகளும் இதில் பங்கேற்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். ஆர் எஸ் எஸ் ஐ நேரு அழிக்க நினைத்ததாக மத்திய அமைச்சர் எல். முருகன் கூறியது குறித்த கேள்விக்கு பதில் அளித்த திருமாவளவன்,
நேரு ஒரு ஜனநாயக சக்தி மனித மனித நேயம் மிக்கவர், அவரே ஆர் எஸ் எஸ் இயக்கத்தை ஒழிக்க வேண்டும் என நினைத்தால், அது எவ்வளவு ஆபத்தான இயக்கம் என புரிந்து கொள்ளுங்கள். அதேபோல் சர்தார் வல்லபாய் பட்டேல் அவரது வாயால் ஆர்எஸ்எஸ் இயக்கம் வளர்வது ஆபத்து, அதனால் பெரும் பாதிப்பை சந்திக்க நேரிடும் என கூறி, அந்த இயக்கத்திற்கு தடை விதித்தார்.
ஆர்எஸ்எஸ் வாலை சுருட்டிக்கொள்ளனும்
காமராஜர் தூங்கி கொண்டிருந்த போது அவரை கொலை செய்ய முயற்சித்தார்கள் ஆர் எஸ் எஸ் இயக்கத்தினர், காந்தியை சுட்டு கொன்ற கும்பல் ஆர் எஸ் எஸ் அது தமிழ் நாட்டில் வாலாட்ட பார்க்கிறது என்றால், வாலை சுருட்டிகொள்ள வேண்டும் என எச்சரிக்கிறோம் என தெரிவித்தார். தமிழ்நாட்டில் ஆர்எஸ்எஸுக்கு வேலை இல்லை அவர்கள் பேரணி நடத்தக்கூடாது அதில் எந்த சந்தேகமும் இல்லையென கூறியவர், ஆர் எஸ் எஸ் பேரணி குறித்து நீதிமன்றம் தீர்மானிக்க கூடாது, சட்ட ஒழுங்கை தீர்மானிக்கும் ஆற்றல் அரசுக்கு தான் உள்ளது.
கொள்கை முடிவு எடுக்கக்கூடிய அதிகாரம் அரசுக்கு தான் உள்ளது. அரசு விரும்புகிறப்படி தான் மற்ற துறைகள் இயங்க வேண்டும். நீதி மறுக்கின்ற இடத்தில் தான் நீதிமன்றம் தன் அதிகாரத்தை செலுத்த வேண்டும். ஒரு பாசிச பயங்கரவாத வன்முறை இயக்கத்திற்கு பேரணி நடத்த, அனுமதி தர வேண்டும் இல்லை என்றால், கண்டனம் வரும் என அரசை நீதிமன்றம் எச்சரிப்பது எந்த வகையில் நியாயம் என தெரியவில்லை என திருமாவளவன் கூறினார்.
இதையும் படியுங்கள்
கைதாகிறாரா ஓ.பி. ரவிந்திரநாத்..? சிறுத்தை மர்ம மரணத்தில் திடீர் சிக்கல்