- Home
- Politics
- மீண்டும் அதிமுகவில் சசிகலா?! சின்னம்மாவுக்கு கவுரவ பதவி வழங்கி எல்லாத்தையும் சரிகட்டும் இபிஎஸ்!
மீண்டும் அதிமுகவில் சசிகலா?! சின்னம்மாவுக்கு கவுரவ பதவி வழங்கி எல்லாத்தையும் சரிகட்டும் இபிஎஸ்!
டெல்லி மேலிடத்தின் அழுத்தத்தால், 2026 தேர்தலைக் கருத்தில் கொண்டு சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்க்க எடப்பாடி பழனிசாமி திட்டமிடுவதாக தெரிகிறது. தென்மாவட்ட வாக்குகளை ஒன்றிணைக்க "கவுரவப் பதவி" வழங்கி இந்த இணைப்பைச் சாத்தியமாக்க முயற்சிகள் நடக்கின்றன.

டெல்லி கொடுத்த கிரீன் சிக்னல்! மாறும் அரசியல் கணக்குகள்
தமிழக அரசியலின் இருபெரும் துருவங்களில் ஒன்றான அதிமுக, ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு பல்வேறு பிளவுகளையும், சட்டப் போராட்டங்களையும் சந்தித்து வருகிறது. தற்போது எடப்பாடி கே. பழனிசாமி தலைமையில் கட்சி ஒருங்கிணைக்கப்பட்டுள்ள நிலையில், சசிகலாவின் மீள்வருகை குறித்த செய்திகள் மீண்டும் அரசியல் களத்தை சூடாக்கியுள்ளன. குறிப்பாக, அவருக்கு "கவுரவப் பதவி" வழங்கி, பிரிந்து கிடக்கும் வாக்குகளை ஒன்றிணைக்க EPS தரப்பு திட்டமிடுவதாக வெளியாகும் தகவல்கள், 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான ஒரு முக்கிய முன்னோட்டமாகக் கருதப்படுகிறது.
டெல்லி தலையீடும் தென்மாவட்ட கணக்குகளும்
அதிமுகவின் பலவீனம் என்பது தென்மாவட்டங்களில் முக்குலத்தோர் சமூக வாக்குகளில் ஏற்பட்டுள்ள சரிவு என்பதை டெல்லி மேலிடம் தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறது. அமித் ஷா உடனான சந்திப்புகளுக்குப் பிறகு, ஓட்டுகளைப் பிரிக்கும் சக்திகளை ஒன்றிணைக்க வேண்டும் என்ற அழுத்தம் EPS-க்கு அதிகரித்துள்ளது. தென்மாவட்டங்களில் சுமார் 40 முதல் 50 தொகுதிகளில் சசிகலாவுக்கு இருக்கும் 3% முதல் 5% வாக்கு வங்கி, அதிமுகவின் வெற்றி வாய்ப்பைத் தீர்மானிக்கும் காரணியாக உள்ளது. இந்த வாக்குகள் சிதறினால் அது நேரடியாக திமுகவுக்கே சாதகமாகும் என்பதால், சசிகலாவை அரவணைப்பதே புத்திசாலித்தனம் என்ற முடிவுக்கு எடப்பாடி தரப்பு தள்ளப்பட்டுள்ளது.
கவுரவப் பதவி: ஒரு சமரச சூத்திரம்
சசிகலாவை மீண்டும் கட்சிக்குள் கொண்டு வரும்போது, அவருக்கு அதிகாரம் மிக்க "பொதுச்செயலாளர்" பதவியை வழங்க EPS முன்வரப்போவதில்லை. மாறாக, கட்சியின் விதிகளில் மாற்றம் செய்து "கவுரவப் பொதுச்செயலாளர்" அல்லது "அம்மா வழிகாட்டுதல் குழுத் தலைவர்" போன்ற ஒரு பதவியை உருவாக்க ஆலோசிக்கப்படுகிறது. இதன் மூலம், சசிகலாவுக்குக் கட்சியில் உரிய மரியாதை வழங்கப்பட்டது போன்ற பிம்பம் உருவாகும். அதேசமயம், வேட்பாளர் தேர்வு, நிதி மேலாண்மை மற்றும் கட்சியின் நிர்வாகக் கட்டுப்பாடு ஆகியவை முழுமையாக எடப்பாடி பழனிசாமி வசமே இருக்கும். இது அதிகாரமற்ற அந்தஸ்து என்ற சூத்திரத்தின் அடிப்படையில் அமையும்.
சசிகலாவின் நிலைப்பாடு
சசிகலா அதிமுகவின் பிரதான முகமாக மாறினால், அது தென்மாவட்டங்களில் பிரிந்து கிடக்கும் தொண்டர்களை மீண்டும் இரட்டை இலை சின்னத்தின் கீழ் கொண்டு வரும். இதனால் முக்குலத்தோர் வாக்குகள் பிரியாமல் அதிமுகவுக்கு போய்ச்சேரும். மேலும் எடப்பாடி ஆளுமை மிக்கவர், அதே சமயம் கட்சிக்காக விட்டக்கொடுக்கிறார் என்ற தகவலையும் தொண்டர்களிடம் கொண்டு செல்லும்.
சவால்களும் அரசியல் விளைவுகளும்
இந்த இணைப்பு முயற்சி அவ்வளவு எளிதானது அல்ல. சி.வி. சண்முகம், ஜெயக்குமார் போன்ற மூத்த தலைவர்கள் சசிகலாவின் வருகையை ஆரம்பத்திலிருந்தே எதிர்த்து வருகின்றனர். அவர்களைச் சமாதானப்படுத்துவது EPS-க்கு ஒரு சவாலாக இருக்கும். மேலும், சசிகலா குடும்பத்தினர் மீண்டும் கட்சிக்குள் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கினால், அது பொதுமக்களிடையே அதிமுகவின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தலாம் என்ற அச்சமும் நிலவுகிறது. இருப்பினும், "திமுகவை வீழ்த்த வேண்டும்" என்ற ஒற்றை இலக்குக்காகப் பழைய கசப்புகளை மறந்து கைகோர்க்கும் சூழல் தற்போது கனிந்து வருகிறது.
சசிகலா வருகை அதிமுகவுக்கு இப்போது தேவை
"சின்னம்மா" சசிகலாவுக்குக் கவுரவப் பதவி வழங்குவது என்பது வெறும் பதவி விவகாரம் மட்டுமல்ல, அது அதிமுகவின் வாழ்வா சாவா போராட்டம். இந்தச் சமரச முயற்சி வெற்றி பெற்றால், அதிமுக ஒரு பலமான கூட்டணியாக உருவெடுத்து திமுகவுக்குப் பெரும் சவாலாக அமையும். மாறாக, அதிகாரப் போட்டி மீண்டும் வெடித்தால், அது அதிமுகவின் சரிவுக்கே வழிவகுக்கும். வரும் வாரங்களில் எடுக்கப்படும் முடிவுகள் தமிழக அரசியலின் அடுத்த 10 ஆண்டுகளைத் தீர்மானிக்கும் என்பதில் ஐயமில்லை.

