கைதாகிறாரா ஓ.பி. ரவிந்திரநாத்..? சிறுத்தை மர்ம மரணத்தில் திடீர் சிக்கல்
மின்வேலியில் சிக்கி சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத்-ன் மேலாளர்கள் இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், ஓ.பி.ரவிந்திரநாத் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மின் வேலியில் சிக்கிய சிறுத்தை
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கோம்பை என்ற ஊருக்கு மேற்கு பகுதியில் உள்ள சொர்க்கம் வனப்பகுதிக்கு அருகே முன்னாள் முதல்வர்
ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும் தேனி மக்களவை உறுப்பினருமான ப.ரவீந்திரநாத்திற்கு சொந்தமாக நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளது.அந்த நிலங்களை சுற்றி நான்கு புறமும் சோலார் மின்வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் கடந்த 27ஆம் தேதி ரவீந்திரநாத்தின் தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த சோலார் மின்வேலியில் சிறுத்தை ஒன்று சிக்கி இருந்ததாகவும்,அதனை மீட்கும் முயற்சியில் பத்துக்கும் மேற்பட்ட வனத்துறையினர் ஈடுபட்டபோது,வன உதவிப் பாதுகாவலர் மகேந்திரன் என்பவரை தாக்கி விட்டு சிறுத்தை காட்டுக்குள் தப்பி ஓடியதாக வனத்துறையினர் தெரிவித்திருந்தனர்.
பொய் வழக்கை வாபஸ் பெற வேண்டும்..! இல்லையென்றால்...? திமுக அரசை எச்சரிக்கும் எஸ்.பி.வேலுமணி
மீண்டும் அதே இடத்தில் இறந்த சிறுத்தை
இந்த நிலையில் வனத்திற்குள் 27ம் தேதி தப்பி ஓடியதாக கூறப்பட்ட சிறுத்தை கடந்த 28-ம் தேதி உயிரிழந்து விட்டதாகவும் அதனை கால்நடை மருத்துவர்கள் பிரேத பரிசோதனை செய்த பின், உடனடியாக எரிக்கப்பட்டதாகவும் வனத்துறையினர் தெரிவித்தது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்ததுடன், வனத்துறையினரின் நடவடிக்கையில் சந்தேகத்தையும் ஏற்படுத்தியது. பின்னர் 28ஆம் தேதியே,ரவீந்திரநாத் - தின் தோட்டத்தில் தற்காலிகமாக "ஆட்டுக்கிடை"அமைத்திருந்த அலெக்ஸ் பாண்டியன் என்பவர் தான் சிறுத்தையை கொன்றதாக கூறி அவரை வனத்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.ஆனால் இது குறித்த எந்த ஒரு முறையான அறிவிப்பையும் வனத்துறையினர் வெளியிடவில்லை.இந்த நிலையில் கால்நடை வளர்ப்பு சங்கத்தின் சார்பாக சுமார் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று முன்தினம் ரவீந்திரநாத்-தின் தோட்டம் அமைந்துள்ள சொர்க்கம் வனப்பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டனர்.
ஆட்டுக்கிடை விவசாயி கைது
அங்கு அமைக்கப்பட்டு இருந்த சோலார் மின்வேலி, சிறுத்தை எரிக்கப்பட்ட இடம் ஆகியவற்றை அவர்கள் ஆய்வு செய்த பின், சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில்,தோட்டத்தின் உரிமையாளர் அமைத்த மின்வேலியில் சிக்கி சிறுத்தை உயிர் இழந்திருக்கலாம் என்றும் அதனை மறைப்பதற்காகவே நிலத்தின் உரிமையாளரும், வனத்துறையினரும் கூட்டு சேர்ந்து நாடகமாடி வருவதாக தெரிவித்தனர். சிறுத்தை உயிரிழந்த விவகாரத்தில் வனத்துறையினர் கைது செய்ய வேண்டுமென்றால் தோட்டத்தின் உரிமையாளரைத் தான் கைது செய்திருக்க வேண்டும், வயிற்றுப் பிழைப்புக்காக வெளியூரிலிருந்து ஆட்டுக்கிடை அமைத்திருந்த விவசாயியை 10க்கும் மேற்பட்ட வனத்துறையினர் பலமாக தாக்கியதுடன் அவர் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்துள்ளதாக தெரிவித்தனர். உடனடியாக விவசாயியை விடுதலை செய்ய வேண்டும் இல்லையென்றால் விவசாயிகளை ஒன்று திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றும் தெரிவித்தனர்.
தோட்ட உரிமையாளரை கைது செய்திடுக..
இதனையடுத்து இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில்,தேனி மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் தோட்ட மேலாளர்களாக பணிபுரியும் தங்கவேல் மற்றும் ராஜவேல் ஆகிய இருவரை வனத்துறையினர் கைது செய்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இந்த விவகாரம் குறித்து தொடர் விசாரணை நடைபெற்று வரும் நிலையில்,தோட்ட உரிமையாளரான ரவீந்திரநாத் எம்.பி.மீதும் வழக்குப்பதிவு செய்யப்படலாம் என்றும் அவரையும் கைது செய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதையும் படியுங்கள்