அதிமுகவிற்கு தொல்லை நீங்கும்.! மேகாலயாவிற்கு ஆளுநராக சென்று விடுங்கள்.!ஓபிஎஸ்க்கு ஐடியா கொடுத்த ராஜன்செல்லப்பா
பாரதிய ஜனதா கட்சியுடன் தொடர்பில் இருக்கும் ஓ.பன்னீர் செல்வம், மணிப்பூர், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களுக்கு ஆளுநராக சென்றுவிட்டால் அதிமுகவிற்கு தொல்லை நீங்கும் என ராஜன் செல்லப்பா தெரிவித்துள்ளார்.
ஆளுநராக சென்று விடுங்கள்
குஜராத் மாநில சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பாஜகவினருக்கு வாழ்த்து தெரிவித்த, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம், பதவியேற்பு விழாவிலும் கலந்து கொண்டார். அப்போது காவி துண்டு அணிந்திருந்தார். இதனை தமிழக அரசியல் கட்சிகள் மற்றும் சமூகவலைதளத்தில் ஓபிஎஸ்சை கடுமையாக விமர்சித்து வந்தனர். இந்தநிலையில் திமுக அரசை கண்டித்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் அதிமுக சார்பாக போராட்டம் நடைபெற்றது. அப்போது மதுரையை அடுத்த திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அக்கட்சியின் அமைப்புச் செயலாளர் ராஜன் செல்லப்பா, பா.ஜ.க.வுடன் நெருங்கிய தொடர்பில் இருக்கும் ஓ.பன்னீர் செல்வம், மணிப்பூர், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களில் ஆளுநர் பதவியை வாங்கிக் கொண்டு போய் விட்டால் அண்ணா தி.மு.க.வுக்கு தொல்லை நீங்கும் என தெரிவித்தார்.
உதயநிதியால் என்ன பயன்
உதயநிதி நடித்த படங்களால் மக்களுக்கு என்ன பயன்? அதைப்பற்றி பொதுமக்களுக்கு ஞாபகம் உள்ளதா. ஆனால் எம்ஜிஆர் ஜெயலலிதா நடித்த படங்கள் மக்களின் மனதில் இன்றளவும் நிலைத்து நிற்கின்றது என கூறினார். இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் மகன் உதயநிதிக்கு, அமைச்சர் பதவி கொடுக்கிறார்கள். மேலும் அவர் சிறப்பு திட்ட செயலாக்கத்துறை அமைச்சர் பதவி பெற போகிறார். இதனால் மக்களுக்கு என்ன பயன் கிடைக்கும்?. மழை வெள்ளத்தால் மக்கள் பாதிப்பு அடைந்திருக்கும் போது முதலமைச்சர் மகனுக்கு மகுடம் சூட்டுவதாகவும் விமர்சித்தார். செங்கலை தூக்கி காட்டிய உதயநிதி, எய்ம்ஸ் மருத்துவமனையை கொண்டு வருவாரா, ஜெயலலிதா கொண்டு வந்த மினி கிளினிக்கை கொண்டு வருவாரா, பெண்களுக்கான மிக்சி, கிரைண்டர் கொடுக்கப் போகிறாரா? எனவும் கேள்வி எழுப்பினார்.
தேர்தலில் பாடம் புகட்டுவார்கள்
தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் பால் விலை, மின்சார கட்டணம் 53 சதவீதமும், வீட்டு வரி 100 சதவீதம் ஏற்றி விட்டார்கள். எனவே நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் திமுக அரசுக்கு பாடம் புகட்டுவார்கள். அனைத்து தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும் என தெரிவித்தார்.
இதையும் படியுங்கள்
மக்களை ஏமாற்றுவது திமுகவிற்கு கைவந்த கலை..! வெற்று அறிக்கையாக திமுக தேர்தல் அறிக்கை..! சசிகலா ஆவேசம்