காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதலில் வீர மரணம் அடைந்த மதுரை ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் நேற்று காலையில் நிதியமைச்சர் பி. டி. ஆர் பழனிவேல் தியாகராஜன் அஞ்சலி செலுத்தி விட்டு திரும்பும் போது அவரது கார் மீது பாஜகவினர் செருப்பு வீசினர்.

ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு மரியாதை செலுத்த சென்ற பாஜகவினரை பார்த்து, இங்கே வருவதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது? இவர்களையெல்லாம் யார் இங்கே உள்ளே விட்டார்கள்? என்று டாக்டர் சரவணன் உட்பட பாஜகவினரை பார்த்து நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆவேசமாக சொன்னதால் ஆத்திரமடைந்த பாஜகவினர் அவரது கார் மீது செருப்பு வீசி எதிர்ப்பை தெரிவித்தனர். கூட்டத்தில் இருந்த பெண் ஒருவர் செருப்பை வீசினார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

இந்த சம்பவத்திற்கு திமுகவினர் புகார் தெரிவித்ததை அடுத்து அந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஆறு பேரை மதுரை அவனியாபுரம் போலீசார் கைது செய்தனர். ஆறு பேரும் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு 26 ஆம் தேதி வரைக்கும் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். நிதியமைச்சர் பி. டி. ஆர். பழனிவேல் தியாகராஜன், ’’நேற்றைய நிகழ்வுகளை பற்றி நான் பின்னர் சொல்கிறேன்’’என்று சொல்லிவிட்டு, பாதுகாக்கப்பட்ட பகுதிக்குள் கட்சி நிர்வாகிகளுடன் அந்தப் பெண் எப்படி உள்ளே அனுமதிக்கப்பட்டார் ?’ என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார். 

மேலும் செய்திகளுக்கு..“ஜெயலலிதா இருந்திருந்தால்.. செருப்படி விழுது தலைவரே.!” குமுறும் திமுகவினர் !

அவர் மேலும், அந்த செருப்பை எனது ஊழியர்கள் பாதுகாப்பாக வைத்து உள்ளார்கள். அந்த செருப்பை திரும்பப் பெற விரும்பினால் உரியவர்கள் பெற்றுக் கொள்ளலாம்’’ என்று அறிவித்திருக்கிறார். இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்திய விடுதலையின் பவள விழா ஆண்டில் மூவண்ணக் கொடியையும், விடுதலைக்காகப் பாடுபட்ட உண்மையான தியாகிகளையும் போற்றுவோம். தேசபக்தி என்ற லேபிளை ஒட்டிக்கொண்டு, தரம் தாழ்ந்த செயல்களில் ஈடுபடும் மூட அரசியல்தனத்தைச் சட்டப்படி அடக்குவோம்.

இந்தியாவின் பன்முகத்தன்மையையும் ஒருமைப்பாட்டையும் மதவெறி அரசியலால் சிதைத்து விடலாம் என நினைப்பவர்கள், தாங்கள்தான் ‘தேசபக்திக்கு’ ஒட்டுமொத்த குத்தகைக்காரர்கள் என்பது போல நினைத்துக்கொண்டு, வரம்புமீறுவது வாடிக்கையாகி வருகிறது. தேசியக் கொடி பொருத்தப்பட்ட மாண்புமிகு அமைச்சரின் கார் மீது செருப்பு வீசி, விடுதலைநாளின் பவள விழா மகத்துவத்தையே மலினப்படுத்தி இருக்கிறார்கள்.

இந்த இழிசெயல்களில் ஈடுபட்டவர்களுடன் இணைந்திருந்த ஒருவரே, நிதியமைச்சரை நேரில் சந்தித்து, தனது செயலுக்கு மன்னிப்பு கோரியிருப்பதுடன், “இனி இவர்களின் சங்காத்தமே வேண்டாம்” எனத் தலைமுழுகி விட்டதாகவும் தெரிவித்துள்ளார். தனது காரில் வீசப்பட்ட ஒற்றைச் செருப்பை அதற்குரிய ‘சிந்த்ரெல்லா’ வாங்கிச் செல்லலாம் என்றும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு, தனக்கு எதிராகச் செயல்பட்டவர்களின் தராதரத்தை அம்பலப்படுத்தியிருக்கிறார்.

மேலும் செய்திகளுக்கு..அந்த வார்த்தை சொன்ன பிடிஆர்.. கடுப்பான பாஜகவினர் - வெளியான அதிர்ச்சி தகவல் !

மதுரை விமான நிலையப் பகுதியில் அமைச்சரின் கார் மீது செருப்பு வீசியும், விடுதலையின் 75-ஆம் ஆண்டு பவளவிழாவில் தேசியக் கொடியை அவமதித்தும் கலவரம் செய்ய முயன்றவர்கள் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் சட்டப்படியான நடவடிக்கை உறுதியாக எடுக்கப்படும். இதற்குத் தூண்டுகோலாக இருக்கும் சக்திகள், தமிழ்நாட்டில் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் சட்டப்படியான கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என எச்சரிக்கக் கடமைப்பட்டுள்ளேன். இது தமிழ்நாடு! இங்கே உங்கள் அரசியல் விளையாட்டு எடுபடாது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுக ஒரு ஜனநாயக இயக்கம். அறவழியில்தான் அது பல நெருக்கடிகளை எதிர்கொண்டு வென்றிருக்கிறது. ஆறாவது முறையாக ஆட்சிப் பொறுப்பில் உள்ள நிலையில், அந்தப் பொறுப்பினை உணர்ந்து, தமிழ்நாட்டின் அமைதிக்கு சிறு குந்தகமும் ஏற்பட்டு விடக்கூடாது என்ற கவனத்துடன் ஆட்சியும் கழகமும் செயல்பட்டு வருகிறது. இதை சாதகமாக நினைத்துக்கொண்டு, சமூக விரோதிகளைக் கொண்ட அரசியல் வீணர்கள் செயல்படுவார்களேயானால் அவர்களைச் சட்டத்தின் பிடியிலிருந்து தப்பவிட மாட்டோம் என்கிற உறுதிமொழியையும் உத்தரவாதத்தையும் வழங்குகிறேன்.

மேலும் செய்திகளுக்கு..பாஜக ஆட்சிக்கு வந்தால் பெரியார் சிலை கதி? நாங்க யாருக்கு சிலை வைப்போம் தெரியுமா ? அண்ணாமலை அதிரடி