பாதுகாப்பு வழங்குங்க.....பாகிஸ்தானிடம் இந்தியா வலியுறுத்தல் ...
கர்தாபூர் குருத்வாராவுக்கு வரும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், அமரீந்தர் சிங் மற்றும் மத்திய அமைச்சர்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பு வழங்கும்படி பாகிஸ்தானிடம் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது.
சீக்கிய மதத்தை தோற்றுவித்த குருநானக் நினைவாக பல 100 ஆண்டுகளுக்கு முன்பு தற்போது பாகிஸ்தான் பகுதியில் உள்ள கர்தார்பூரில் தர்பார் சாஹிப் குருத்வாரா கட்டப்பட்டது. இங்கு செல்வது சீக்கியர்களின் வாழ்நாள் கடமையாக கருதப்படுகிறது.
இந்தியாவின் தேரா பாபா நானக் குருத்வாராவுக்கும், கர்தார்பூர் குருத்வாரவுக்கும் இடையே வழித்தடம் அமைக்க இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த ஆண்டு ஒப்பந்தம் ஏற்பட்டது. இதற்கான பணிகள் முடிவடைந்து இன்னும் சில நாட்களில் இந்த வழித்தடம் திறக்கப்பட உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி நாளை இந்திய பகுதியில் கர்தாபூர் வழித்தடத்தை தொடங்கி வைக்கிறார். அதற்கு அடுத்த நாள் பாகிஸ்தானில் இம்ரான் கான் கர்தாபூர் வழித்தடத்தை தொடங்கி வைக்கிறார்.
நவம்பர் 11ம் தேதி முதல் இந்திய சீக்கியர்கள் இந்த வழித்தடம் வாயிலாக கர்தாபூர் குருத்வாராவுக்கு செல்லுவர். அந்த குருத்வாராவுக்கு செல்லும் முதல் சீக்கிய யாத்ரீகர்கள் பட்டியலில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் மற்றும் மத்திய அமைச்சர்கள் ஹர்தீப் புரி, ஹர்சிம்ரவுத் கவுர் பாதல் உள்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் இடம் பிடித்துள்ளனர்.
இந்நிலையில் தீவிரவாத அச்சுறுத்தல் உள்ளதால் கர்தாபூர் வரும் மன்மோகன் சிங், அமரீந்தர் சிங் உள்பட முக்கிய வி.வி.ஐ.பி.க்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பு வழங்கும்படி பாகிஸ்தானிடம் மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. மேலும், குறிப்பிட்ட தீவிரவாத அச்சுறுத்தல் குறித்த தகவல்களை பாகிஸ்தானுடன் இந்தியா பகிர்ந்து உள்ளது. அதேசமயம் பாகிஸ்தான் தனது பொறுப்பை உணர்ந்து எப்படி செயல்படுகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.