பாஜகவுடன் கூட்டணி முறிந்துள்ள நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக ஆலோசிக்க மாவட்ட செயலாளர்கள் மற்றும் மூத்த நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டத்திற்கு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்துள்ளார். 

அதிமுக- பாஜக மோதல்

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் கடந்த 4 ஆண்டுகளாக பாஜக இடம்பெற்றிருந்தது. வருகிற நாடாளுமன்ற தேர்தலை இரண்டு கட்சிகளும் ஒன்றினைந்து சந்திக்க திட்டமிட்டிருந்தது. ஆனால் அதிமுக- பாஜக இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டது. தமிழகத்தில் யார் எதிர்கட்சி என்ற நிலைப்பாட்டில் சர்ச்சை ஏற்பட்டது. இந்தநிலையில் மறைந்த முதலமைச்சர் அண்ணா மற்றும், ஜெயலலிதா தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சித்து பேசியது மேலும் மோதலை அதிகரித்தது. இதனையடுத்து அதிமுகவினர் அண்ணாமலையின் கருத்திற்கு பதிலடி கொடுத்தனர். இந்த கருத்து மோதல் உச்சகட்டத்தை அடைந்த நிலையில், பாஜகவுடன் கூட்டணியில் இருந்து விலகுவதாக அதிமுக அறிவித்தது. 

பாஜகவுடன் கூட்டணி முறிவு.?

இதனையடுத்து இரு தரப்பையும் சமானதனம் செய்யும் முயற்சி நடைபெற்றது. அதிமுக மூத்த நிர்வாகிகள் தங்கமணி, வேலுமணி, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட நிர்வாகிகள் பாஜக தேசிய தலைமையை சந்திக்க டெல்லி சென்றனர். ஆனால் அமித்ஷாவை சந்திக்க திட்டமிட்டிருந்த நிலையில், அவரை சந்திக்க முடியாமல் மத்திய அமைச்சர் பியூஸ் கோயலை மட்டும் சந்தித்து தங்களது புகாரை தெரிவித்து வந்தனர்.

இதனையடுத்து நேற்று மாலை சேலத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த தங்கமணி, டெல்லியில் நடைபெற்ற நிகழ்வுகள் தொடர்பாக விவரித்தார். இதனையடுத்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி தலைமையில் தலைமை கழக நிர்வாகிகள் மாவட்ட கழக செயலாளர், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆலோசனைக் கூட்டம் நாளை மாலை 3.45 மணிக்கு நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்கு அழைப்பு

ராயப்பேட்டையில் உள்ள கழக அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில் கழக பொதுச்செயலாளர் எடப்பாடி கே பழனிச்சாமி தலைமையில் இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள் தமிழக முழுதும் உள்ள மாவட்ட கழக செயலாளர் கழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. ஏற்கனவே பாஜகவுடன் கூட்டணி இல்லையென அறிவித்துள்ள நிலையில், அடுத்த கட்டம் திட்டம் தொடர்பாக ஆலோசிக்கப்பட இருப்பதாக தெரிகிறது. 

இதையும் படியுங்கள்

குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் உதவித்தொகை திட்டம்... நான் தந்த யோசனை- கமல்ஹாசன்