அண்ணாமலை குரலில் மிமிக்ரி செய்து ஆடியோ வெளியீடு..? அதிரடியாக களத்தில் இறங்கிய பாஜக.. சைபர் கிரைமில் புகார்
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குரல் போல் மிமிக்ரி செய்து ஆடியோ வெளியிடப்பட்டுள்ளதாக மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பாஜகவினர் புகார் அளித்துள்ளனர்.
திமுக- பாஜக மோதல்
ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடைபெற்ற சண்டையில் மதுரையை சேர்ந்த லட்சுமணன் என்ற ராணுவ வீரர் உயிர் இழந்தார். அவருடைய உடல் மதுரை விமான நிலையத்திற்கு கடந்த 13ஆம் தேதி கொண்டு வரப்பட்ட போது அஞ்சலி செலுத்துவதில் தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் மற்றும் பாஜகவினருக்கு இடையே மோதல் ஏற்பட்டது. இதனையடுத்து நிதி அமைச்சரின் வாகனம் மீது பாஜகவினர் செருப்பை வீசினர். இதனால் பரபரப்பு ஏற்பட்ட நிலையில், பாஜகவை சேர்ந்த மகளிர் அணியினர் உள்ளிட்ட 8 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இதனையடுத்து செருப்பு வீச்சு சம்பவத்திற்கு அமைச்சர் பிடிஆரை சந்தித்து மன்னிப்பு கேட்ட பாஜக மதுரை மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன், பாஜகவில் இருந்தும் விலகினார். இதனையடுத்து புதிய மாவட்ட தலைவராக சுசீந்திரனை பாஜக தலைமை நியமித்துள்ளது.
அண்ணாமலை குரலில் ஆடியோ
இந்தநிலையில் அண்ணாமலையும், தற்போதைய மதுரை மாவட்ட தலைவர் சுசீந்திரனும் பேசுவது போன்ற ஆடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் பேசும் நபர், மற்றொருவரிடம் எத்தனை பேர் இருக்கிறார்கள் என கேட்டு, அனைவரையும் வர சொல்லுமாறு கூறப்படுகிறது. மேலும் அந்த நபர், மாசாக பண்ண வேண்டும். வேறு மாதிரி பண்ணுவோம். இதை எப்படி அரசியல் பண்ணுவது என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன். அரசியல் பண்ணிவிடுவோம் என்று கூறுகிறார். இந்த ஆடியோ தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. திமுகவினரும் சமூக வலை தளத்தில் அண்ணாமலையை விமர்சித்து ஆடியோவை பதிவிட்டு வருகின்றனர். இந்த நிலையில், இந்த ஆடியோவில் உள்ள குரல் தன்னுடைய குரல் இல்லையென மறுத்த பாஜக மாவட்ட தலைவர் சுசீந்திரன், திமுகவினர் தில்லு முல்லு வேலை என தெரிவித்தார். மேலும் அண்ணாமலை பல்வேறு இடங்களில் பேசிய ஆடியோவை எடிட் செய்து வெளியிட்டுள்ளதாக புகார் கூறியிருந்தார்.
காவல்நிலையத்தில் புகார்
இந்த நிலையில் அண்ணாமலை பேசியதாக ஆடியோவை மிமிக்ரி செய்து வெளியிட்டு அவப்பெயர் ஏற்படுத்தியதாக கூறி பாஜக மாவட்ட தலைவர் சுசீந்திரன் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் ஆடியோ வெளியிட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்