நேபாளத்தில் லேசான நிலநடுக்கம் – அதிகாலையில் பரபரப்பு
நேபாளத்தில் இன்று அதிகாலை இலேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
தலைநகர் காத்மாண்டுவில் இருந்து சுமார் 150 கி.மீ. தூரத்தில் உள்ள எவரெஸ்ட் சிகரத்தின் அடிவாரத்தில் சோலுகும்பு மாவட்டம் அமைந்துள்ளது. இதனை மையமாக கொண்டு, பூமிக்கு அடியில் சுமார் 10 கி.மீ. ஆழத்தில், இன்று அதிகாலை சுமார் 5 மணியளவில் திடீர் நில நடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம், ரிக்டர் அளவுக்கோலில் 5.5 அலகுகளாக பதிவானதாக அந்நாட்டின் புவிசார் ஆய்வு மையம் அறிவித்துள்ளது. கிழக்கு நேபாளத்துக்கு உட்பட்ட பல பகுதிகள் மற்றும் காத்மாண்டு நகரில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக அங்குள்ள ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இன்றைய நிலநடுக்கத்தால் பாதிப்பு எதுவும் ஏற்பட்டதா? என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. நேபாளத்தில் கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்துக்கு பிறகு, அங்கு இதுவரை ரிக்டர் அளவுகோலில் 4, அதற்கு அதிகமாகவும் 475 முறை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.