கைவிட்டுப் போன திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் பதவி…. தமிழ்நாட்டை தவிக்கவிட்ட நாயுடு…
திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர் நியமனத்தில் தமிழகத்தை ஆந்திர அரசு புறக்கணித்துள்ளது. தமிழகத்தில் இருந்து இந்தப் பதவிக்கு ஒருவர்கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை.
திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு செல்லும் பக்தர்களில் 48 சதவீதத்தினர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். 1932-ம் ஆண்டு திருமலை திருப்பதி தேவஸ்தானம் அமைக்கப்பட்டது முதல் அறங்காவலர் குழுக்களில் தமிழர்களுக்கு பிரதிநிதித்துவம் அளிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், புட்டா சுதாகர் யாதவ் தலைமையில் புதிய அறங்காவலர் குழு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் தமிழகத்தைச் சேர்ந்த யாரும் இல்லை. ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க மறுத்த மத்திய அரசுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் தெலுங்கு தேசம், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தன.
அப்போது காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி தமிழக எம்.பி.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டதால் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது சபாநாயகர் வாக்கெடுப்பு நடத்தவில்லை. இதனால் ஏற்பட்ட அதிருப்தியால், தேவஸ்தான அறங்காவலர் குழுவில் தமிழர்களுக்கு ஆந்திர அரசு இடம் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
மேலும் ஏற்கனவே அறங்காவலர் குழு உறுப்பினராக இருந்த சேகர் ரெட்டி மீது பயங்கரமான ஊழல் குற்றச்சாட்டுக்கள் இருந்ததால் ஒருவர்கூட தேர்ந்தெடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.
அதே நேரத்தில் அறங்காவலர் குழுவில் மஹாராஷ்டிராவைச் சேர்ந்த ஒருவருக்கு முதன்முறையாக வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. மேலும் கர்நாடகா சார்பில் ஒருவருக்கும், தெலங்கானா மாநிலத்தின் சார்பில் இருவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.