கொரோனா லாக்டவுன்.. சரக்கு அடிக்க முடியாத விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட இளைஞர்
கொரோனா பீதியில் உலகமே உறைந்துள்ள நிலையில், கேரளாவில் ஒருவர் ஊரடங்கால், மது அருந்த முடியாத விரக்தியில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது.
கொரோனா பாதிப்பு இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு 750ஐ நெருங்கிவிட்டது. கொரோனா பாதிப்பு அதிகரித்தாலும், இந்தியாவில் இன்னும் சமூக தொற்றாக அது பரவவில்லை. அதற்குள்ளாக ஊரடங்கு அமல்படுத்தி, மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முடுக்கிவிட்டதால், சமூக பரவல் தடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் ஏப்ரல் 14ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால், தொழில் முனைவோர், மாத ஊதிய ஊழியர்கள், தினக்கூலி தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினருமே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனாவிலிருந்து தப்பிக்க வேண்டும் என்பதற்காக வருவாயை இழந்து மக்கள் வீடுகளில் முடங்கியுள்ளனர். உயிருக்காக அனைவரும் ஊரடங்கை ஏற்று வருவாயை இழந்து வீடுகளில் முடங்கியுள்ள நிலையில், மது அருந்த முடியவில்லை என்பதற்காக ஒருவர் கேரளாவில் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.
கேரளாவில் குன்னம்குளம் அருகில் உள்ள தானாவூர் என்ற ஊரை சேர்ந்த 38 வயது இளைஞரான சனுஜ், தினமும் மது அருந்தி பழக்கப்பட்டவர். ஊரடங்கால் மதுக்கடைகளும் மூடப்பட்டிருப்பதால், அவரால் கடந்த 2-3 நாட்களாக மது அருந்த முடியவில்லை. மதுபானம் கிடைக்காத விரக்தியில் வியாழக்கிழமை வீட்டில் கோபமாக நடந்துகொண்டுள்ளார். அவரது செயல்பாடுகள் வன்முறையாகவும் இருந்துள்ளன.
இந்நிலையில், அவர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். அவர் கடந்த சில தினங்களாக மது அருந்த முடியாத விரக்தியில் இருந்ததையும் அதன் விளைவாக அவர் கோபமாக நடந்துகொண்டதையும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். அதனால் அவர் மது அருந்த முடியாத விரக்தியில் தான் தற்கொலை செய்துகொண்டிருப்பார் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.