மோடியின் மற்றொரு முகம் - நமது வீரர்களின் தாக்குதலில் இருந்து பாகிஸ்தான் மீளவில்லை
நமது வீரர்களின் துல்லியமான தாக்குதலில் இருந்து பாகிஸ்தான் இன்னும் மீளவில்லை என பிரதமர் மோடி கூறினார்.
பஞ்சாப் மாநிலம், பதிந்தாவில் ரூ.926 கோடி மதிப்பில் அமைய உள்ள எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டு விழா நடந்தது. பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, அடிக்கல் நாட்டி வைத்து பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:- “துல்லியமான தாக்குதல்கள் நடத்தியதால் ஏற்பட்ட பின்னடைவில் இருந்து பாகிஸ்தான் இன்னும் மீளவில்லை. இந்தியாவுக்கு எதிராக சண்டை போட்டு அந்த நாடு தன்னை தானே சேதப்படுத்தி கொள்கிறது.
பலம் இருந்தும் நமது வீரர்கள் தங்களது வீரத்தை காட்ட முடியாமல் இருந்து வந்தனர். ஆனால் எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் 250 கி.மீ. பரப்பளவில் அவர்கள் துல்லியமான தாக்குதல்கள் நடத்தியபின்னர் பாகிஸ்தான், நமது வீரர்களின் வீரத்தை பார்த்திருக்கும்” என குறிப்பிட்டார்.
“சிந்து நதி நீர் ஒப்பந்தப்படி, சட்லஜ், பீஸ், ரவி நதி நீர் இந்தியாவுக்கும், நமது விவசாயிகளுக்கும் உரித்தானது. இதை பாகிஸ்தானில் உள்ள வயல்களில் பயன்படுத்தக்கூடாது. இந்த நீரின் ஒவ்வொரு சொட்டையும் தடுத்து நிறுத்த வேண்டும். அந்த தண்ணீரை பஞ்சாப், காஷ்மீர், இந்திய விவசாயிகளுக்கு தருவேன். நான் இதை செய்ய உறுதி கொண்டுள்ளேன்” என்றார்.