அடிக்கடி கண்களை கசக்கும் பழக்கத்தால் வரும் பிரச்சனைகள் குறித்து மருத்துவர்கள் விளக்கத்தைக் இங்கு காணலாம்.

கண்கள் உணர்திறன் அதிகம் கொண்ட உறுப்பாகும். அதனால் தான் கண்ணில் தூசு விழுந்தால் கூட துடித்து போகிறோம். கண்களை தூசி உறுத்துவதால் கைகளும் அனிச்சையாக கண்களை கசக்க ஆரம்பிக்கும். இது சாதாரணமான விஷயமாக இருந்தாலும் கொஞ்சம் ஆபத்தான பழக்கமாகும். பொதுவாக கண்களில் அரிப்பு வந்தால் அது தொற்றால்தான் ஏற்படும். அடிக்கடி கண்களை கசக்கினால் கண் தொற்று வரும் வாய்ப்புள்ளது.

கண்களை கசக்க காரணங்கள்

சிலருக்கு தலையில் பேன், பொடுகு தொல்லை இருக்கும். தலை வாரும்போது கண்களில் பொடுகு அல்லது பேன்/ ஈறு விழுந்தால் கண்களில் அரிப்பு வரும். கண்ட இடங்களில் விளையாடி அழுக்கோடு குழந்தைகள் கண்ணில் கை வைத்தால் தீவிர நோய்த் தொற்று வரக் கூடும். கண்களை கசக்குவதை சிலர் பழக்கமாகவே வைத்திருப்பார்கள். இதனால் கண்களில் இருக்கும் குளுக்கோமா, லென்ஸ் படலம், விழித்திரை ஆகியவை மோசமாக பாதிப்புக்குள்ளாகும். கண்களை அழுத்தி அடிக்கடி கசக்குவது கண் பார்வை குறைபாட்டிற்கு வழிவகுக்கும்.

தொடர்ந்து கணிணி பார்ப்பவர்களுக்கு ஒவ்வாமையால் கண்களில் அரிப்பு வரலாம். இதனால் சிலர் கண்களை கசக்குவார்கள். இப்படி தேய்த்தால் வாகஸ் நரம்பு தூண்டப்பட்டு ஒரு தற்காலிக திருப்தி கிடைக்கும். ஆனால் இது மோசமான பாதிப்பைதான் ஏற்படுத்தும். வெகுநாட்களாக கண்களை கசக்கினால் கார்னியா பலவீனமாகும். இதனால் கெரடோகோனஸ் என்ற நோய் வரலாம். நம் கண்களை அடிக்கடி தேய்த்தால் கார்னியா மெல்லியதாகி கூம்பு வடிவமாகும். ஆகவே தான் கண்களை அடிக்கடி கசக்கக் கூடாது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

கீறல்கள்

கண்களில் தூசி, துரும்பு விழும்போது உடனடியாக தேய்ப்பதால் அவை கார்னியாவில் ஒட்டி கீறல்களை உண்டாக்கலாம். இந்த கீறல்கள் நாளாக ஆக புண்ணாகி கண்களில் பாதிப்பை உண்டாக்கும். ஏற்கனவே கண்களில் உயர் அழுத்தத்தால் குளுக்கோமா பிரச்சனை இருப்பவர்கள் கண்களை அடிக்கடி கசக்கினால் பார்வை இழப்பு கூட ஏற்படலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கிட்டப்பார்வை சர்வநாசம்

கிட்டப் பார்வை குறைபாடு இருப்பவர்கள் அடிக்கடி கண்களை கசக்கினால் கண்பார்வை குறைபாடு மேலும் மோசமாகிறது. நம் கைகளில் உள்ள கிருமிகள் கண்களில்பட்டால் கட்டிகள், கண்கள் சிவப்பாதல், கண்களில் அரிப்பு ஆகிய பிரச்சினைகள் வரலாம். இப்படியான பிரச்சனைகளை தவிர்க்க கண்களை கசக்காமல் இருப்பதே நல்லது. கண்களை அடிக்கடி கசக்கினால் கண்கள் வறட்சியாகும். இதனால் கண்களில் எரிச்சல் வலி ஏற்படலாம்.

இரத்தக் கசிவு

அடிக்கடி கண்களை கசக்கினால் கண்களில் இருக்கும் சிறிய இரத்த நாளங்கள் பாதிப்படையும். இது கண்களுக்குள் இரத்தக் கசிவை ஏற்படுத்தலாம். கண்களை அடிக்கடி கசக்கினால் கருப்பு வட்டங்கள் கண்களில் வரும். இதை கண்டு கொள்ளாமல் விட்டால் நாளடைவில் கண்களில் உள்ள நிறமிகளை பிரித்தறியும் தன்மையை செயலிழக்கச் செய்யும். அதனால் ஆரம்பத்திலேயே மருத்துவரிடம் செல்வது நல்லது. முடிந்தவரை கண்களை கசக்காமல் இருக்க வேண்டும். கண்களை கசக்காமல் இருக்க டிப்ஸ்

  • உங்களுடைய கண்களில் தூசி விழுந்தால் உடனே கசக்க வேண்டாம். தூய்மையான தண்ணீரில் கண்கள் விழிக்கலாம். தண்ணீர் கொண்டு முகம் கழுவலாம்.
  • தலையில் பொடுகு இருந்தாலும் கண் அரிப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது. அதனால் பொடுகை நீக்க நடவடிக்கை எடுங்கள்.
  • ரொம்ப நேரம் கணினி பார்க்கும் வேலையாக இருந்தால் அவ்வப்போது கண்களுக்கு ஓய்வு கொடுங்கள். கண்களுக்கான சில பயிற்சிகளை செய்வது நல்லது. கண்கள் அதிகமாக அரிப்பு பிரச்சனையை கொண்டிருந்தால் மருத்துவரிடம் ஆலோசித்து ஆன்டிபயாட்டிக் சொட்டு மருந்துகளை பயன்படுத்தலாம்.
  • கண்களில் ஏதேனும் தொற்று நோய் இருக்கும்பட்சத்தில் நல்ல பருத்தி துணியால் வெந்நீர் தொட்டு ஒத்தடம் கொடுக்கலாம்.
  • காண்டாக்ட் லென்ஸ் போடுபவர்கள் அதை சுத்தமாக கழுவி பயன்படுத்துங்கள்.
  • குழந்தைகளை அடிக்கடி கண்களை கசக்காமல் கவனித்து கொள்ளுங்கள்.
  • சூரியஒளியில் இருந்து ஏற்படும் கண்கள் பாதிப்பை தடுக்க ல்சன் கிளாஸ் அணியலாம்.
  • கண்வலி இருக்கும் நபர்களிடம் இருந்து விலகி இருங்கள். அவர்களிடம் நெருங்கி பழக வேண்டாம்.