Asianet News TamilAsianet News Tamil

பக்கத்து தெரு வரை மணமணக்கும் நெத்திலி கருவாடு தொக்கை இப்படி செஞ்சா, சமைத்தவருக்கு ஒன்னுமே மிஞ்சாது!

இன்று நாம் பலரும் விரும்பி சாப்பிடும் நெத்திலி கருவாடு வைத்து தொக்கு ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

How to Prepare Dry Fish Thokku in Tamil
Author
First Published Mar 23, 2023, 12:47 PM IST


அசைவ பிரியர்கள் மட்டன், சிக்கன்,மீன் , முட்டை ,கருவாடு என்று அனைத்தையும் விரும்பி சாப்பிடுவார்கள். அதிலும் குறிப்பிட்டு சொன்னால் கருவாட்டிற்கு என்று எப்போதும் ஒரு தனி மவுசு உண்டு. கருவாடு வைத்து கருவாடு குழம்பு, கருவாடு தொக்கு, கருவாடு புட்டு, கருவாடு மசாலா என்று பல விதமான ரெசிபிக்களை செய்து சாப்பிடலாம்.

கருவாடை சமைக்கும் போதே இதன் கமகம மணம் பக்கத்து தெரு வரைக்கும் செல்லும். மணம் மட்டும் தானா இல்லை சுவையும் இன்று பேசும். இந்த கருவாடு உணவு வகைகளை பலரும் இரண்டு நாட்கள் வைத்து சாப்பிடுவார்கள். அப்படி சாப்பிடுகையில் அதன் சுவை இன்னமும் தூக்கலாக இருக்கும். அப்படியான கருவாடை வைத்து ஒரு சூப்பரான ரெசிபியை பார்க்கலாம் .

கருவாடில் அயிரை கருவாடு, நெத்திலி கருவாடு, மாசி கருவாடு, நகரை கருவாடு என்று இன்னும் இதன் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். அந்த வகையில்

இன்று நாம் பலரும் விரும்பி சாப்பிடும் நெத்திலி கருவாடு வைத்து தொக்கு ரெசிபியை வீட்டில் எப்படி எளிமையாக செய்வது என்று இன்றைய பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள் :
 

நெத்திலி கருவாடு - 100 கிராம்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 1
பூண்டு - 10 பற்கள்
தக்காளி - 4
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 4 ஸ்பூன்
மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்
கடுகு - 1/4 ஸ்பூன்
கறிவேப்பில்லை - 1 கொத்து
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - தேவையான அளவு
 

ஹெல்த்தி பிரேக்ஃபாஸ்ட்க்கு ரைட் சாய்ஸ் "ராகி பூரி"! நீங்களும் செய்து பார்த்து அசத்துங்க!

செய்முறை :

முதலில் கருவாட்டை 2 அல்லது 3 முறை தண்ணீரில் அலசி விட்டு சுத்தம் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாயை மற்றும் பூண்டினை மிகப் பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடான பின்பு அதில் கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

அடுத்தாக அதில் பூண்டு சேர்த்து வதக்கி விட்டு பின் பொடியாக அரிந்து வைத்துள்ள வெங்காயம் சேர்த்து அதன் கண்ணாடி பதத்திற்கு மாறும் வரை வதக்கி விட வேண்டும். பின்னர் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி அதன் பச்சை வாசனை சென்ற பிறகு பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கி விட வேண்டும். இப்போது பொடியாக அரிந்து வைத்துள்ள தக்காளி சேர்த்து தக்காளி மசியும் வரை வதக்கி விட வேண்டும். அடுத்தாக அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் உப்பு சேர்த்து வதக்கி விட வேண்டும்.

மசாலாவின் பச்சை வாசனை போன பிறகு கருவாடை போட்டு கிளறி விட வேண்டும். பின் சிறிது தண்ணீர் தெளித்து மிதமான தீயில் வைத்து சுமார் 10 நிமிடங்கள் வரை வேக வைக்க வேண்டும். மசாலா கெட்டியாகி தொக்கு பதத்திற்கு வந்த பிறகு மல்லித்தழை தூவி இறக்கினால் அருமையான நெத்திலி கருவாடு தொக்கு ரெடி!

Follow Us:
Download App:
  • android
  • ios