Asianet News TamilAsianet News Tamil

அஜீரண கோளாறுகளை சரி செய்யும் இஞ்சி சட்னி !

வாருங்கள்! இஞ்சி வைத்து டேஸ்ட்டான,சத்தான ஒரு துவையல் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

How to make Ginger Chutney in Tamil
Author
First Published Feb 24, 2023, 12:13 PM IST

நாம் வீட்டில் சமைக்கும் சைவம் அல்லது அசைவம் என்று எந்த உணவானாலும் இஞ்சியை நாம் பயன்படுத்தி வருகிறோம்.இஞ்சி சுவையும், மணமும் மட்டும் தராமல் ஏராளமான மருத்துவ குணங்களையும் தருகிறது. இஞ்சியில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் செரிமான பிரச்சினை முதல் புற்றுநோய் வரை தடுக்கும் ஆற்றல் மிக்கது. இஞ்சியானது ரத்த நாளங்களின் செயல்பாட்டை அதிகப்படுத்தி மாரடைப்பு வராமல் தடுக்கும் குணம் கொண்டது. மேலும் ரத்த ஓட்டத்தை சீராக வைத்துக் கொள்ள உதவுகிறது. இப்படி பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ள இஞ்சியை வைத்து ஒரு ரெசிபியை காண உள்ளோம்.

இஞ்சி வைத்து சுவையான சத்தான துவையல் ரெசிபியை பார்க்க உள்ளோம். இதனை இட்லி, தோசை, தயிர் சாதம், தக்காளி சாதம் லெமன் சாதம் போன்றவைக்கு நல்ல காம்பினேஷனாக இருக்கும். இதனை சிறிது எடுத்துக் கொண்டாலே வயிற்று வலிக்கு உடனடி நிவாரணம் கிடைக்கும்.

வாருங்கள்! இஞ்சி வைத்து டேஸ்ட்டான,சத்தான ஒரு துவையல் ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

தேவையான பொருட்கள் :

இஞ்சி - 2 இன்ச்
வர மிளகாய் - 4
உளுத்தம் பருப்பு - 1 ஸ்பூன்
புளி -லெமன் சைஸ்
தேங்காய் -1/2 கப்
கடுகு -1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை -1 கொத்து
எண்ணெய்- தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு.
 

இப்படி "ஆலூ சாட்" செய்து கொடுத்தால் யார் தான் வேண்டாம் என்று கூறுவார்கள்!


செய்முறை:

முதலில் இஞ்சியை அலசி விட்டு பொடியாக அரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். தேங்காயை துருவி வைத்துக் கொள்ள வேண்டும் .அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிது எண்ணெய் சேர்த்து, எண்ணெய் சூடான பிறகு அதில் பொடியாக அரிந்து வைத்துள்ள இஞ்சி, உளுத்தம் பருப்பு, வர மிளகாய், துருவிய தேங்காய் ஆகியவற்றை சேர்த்து வறுக்க வேண்டும்.இவை அனைத்தையும் சிவக்க வறுத்துக் கொள்ள வேண்டும். பின் அதில் புளி, உப்பு மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து கிளறி விட்டு அடுப்பில் இருந்து இறக்கி விட வேண்டும்.

கலவை ஆறிய பிறகு அதனை மிக்சி ஜாரில் சேர்த்து சிறிதளவு தண்ணீர் தெளித்து மைப் போன்று அரைத்துக் கொள்ள வேண்டும்.அடுப்பில் ஒரு கடாய் வைத்து அதில் சிறிதளவு எண்ணெய் விட்டு, எண்ணெய் சூடான பின் கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து விட வேண்டும். பின் அதில் அரைத்து வைத்துள்ள துவையலை சேர்த்து சிறிது நேரம் வதக்கி விட்டு ஒரு பௌலில் எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்ளோதான்! இஞ்சி சட்னி ரெடி!. இதனை 2 அல்லது 3 நாட்கள் வரை வைத்து சாப்பிடலாம்.

Follow Us:
Download App:
  • android
  • ios