- Home
- உலகம்
- மோடி ஒரு நல்ல மனுஷன்.. என்னை சந்தோஷப்படுத்திட்டாரு.. ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் டிரம்ப் குஷி!
மோடி ஒரு நல்ல மனுஷன்.. என்னை சந்தோஷப்படுத்திட்டாரு.. ரஷ்ய எண்ணெய் விவகாரத்தில் டிரம்ப் குஷி!
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்ததற்காக பிரதமர் மோடியை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பாராட்டியுள்ளார். மோடி ஒரு சிறந்த மனிதர் என்று புகழ்ந்தாலும், ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கினால் வரிகளை உயர்த்த நேரிடும் என எச்சரித்துள்ளார்.

மோடி நல்ல மனிதர்!
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்துக் கொண்டதற்காக, பிரதமர் நரேந்திர மோடியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.
புளோரிடாவிலிருந்து வாஷிங்டன் திரும்பும் வழியில் 'ஏர் ஃபோர்ஸ் ஒன்' (Air Force One) விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், பிரதமர் மோடியைப் புகழ்ந்து தள்ளினார்.
"மோடி ஒரு மிகச்சிறந்த மனிதர். ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்குவதில் எனக்கு உடன்பாடில்லை என்பது அவருக்குத் தெரியும். என்னை மகிழ்ச்சிப்படுத்துவது அவருக்கு முக்கியமாக இருந்தது. அதற்கேற்ப இந்தியா தனது கொள்கையை மாற்றிக்கொண்டு இறக்குமதியைக் குறைத்துள்ளது," என்று டிரம்ப் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
எச்சரிக்கையும் பாராட்டும்
அதே சமயம், வர்த்தக ரீதியான தனது அதிரடிப் போக்கையும் டிரம்ப் விட்டுக்கொடுக்கவில்லை.
"இந்தியா எங்களோடு வர்த்தகம் செய்கிறது. ஒருவேளை அவர்கள் ரஷ்யாவிடம் தொடர்ந்து எண்ணெய் வாங்கினால், நாங்கள் மிக விரைவாக வரிகயை (Tariffs) உயர்த்த முடியும்," என எச்சரித்தார்.
ஏற்கனவே இந்தியா ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதற்காக, அமெரிக்கா 25 சதவீத கூடுதல் இறக்குமதி வரியை விதித்திருந்தது. இதனால் இந்தியாவின் அமெரிக்க ஏற்றுமதி பாதிக்கப்படலாம் என்பதால், இந்தியா இறக்குமதியைக் குறைத்ததாகக் கூறப்படுகிறது.
பாகிஸ்தான் மற்றும் சீனாவுக்குப் பாடம்
அமெரிக்க செனட்டர் லிண்ட்சே கிரஹாம் இதுகுறித்து கூறுகையில், "அதிபர் டிரம்பின் வரி விதிப்பு அழுத்தம் தான் இந்தியா தனது முடிவை மாற்றிக்கொள்ள முக்கியக் காரணம். இப்போது இந்தியா கணிசமாக ரஷ்ய எண்ணெய் வாங்குவதை நிறுத்திவிட்டது. இது ரஷ்யாவின் போர் வலிமையைக் குறைக்கும்," என்றார்.
ரஷ்யாவிடமிருந்து மலிவான விலையில் எண்ணெய் வாங்கி, புதினின் போர் எந்திரத்திற்குப் பணம் கொடுக்கும் எந்த நாடும் அமெரிக்காவின் கடும் வரி விதிப்பைச் சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்தார்.

