- Home
- உலகம்
- Sun Therapy: ICU நோயாளிக்கு வெயிலில் நடந்த மேஜிக்! சூரிய ஒளியில் சிகிச்சை! இது எப்படி சாத்தியம்?
Sun Therapy: ICU நோயாளிக்கு வெயிலில் நடந்த மேஜிக்! சூரிய ஒளியில் சிகிச்சை! இது எப்படி சாத்தியம்?
Sun Therapy: பிரிட்டனில் ஒரு மருத்துவமனையில் ICU-வில் இருந்த ஒரு பெண்மணிக்கு 'சன் தெரபி' அளிக்கப்படுள்ளது. சூரிய ஒளி சிகிச்சை என்றால் என்ன? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

ஐரோப்பாவில் சூரிய ஒளியில் சிகிச்சை
ஒரு பெண்மணி வீல்சேரில் அமர்ந்து வெயிலில் இருக்கும் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இவர் பிரிட்டனில் உள்ள ஒரு மருத்துவமனையில் 'சன் தெரபி' எடுத்துக்கொள்கிறார். சில நாட்களுக்கு முன்பு வரை இவர் ICU-வில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஐரோப்பா முழுவதும் பல மருத்துவமனைகளில் இந்த 'சன் தெரபி' மிகவும் பிரபலமாகி வருகிறது. மிகவும் ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளைக் கூட, சிறிது நேரம் வெயிலில் அமர வைத்து மருத்துவர்கள் குணப்படுத்த முயற்சிக்கின்றனர். அதனால், இந்த சிகிச்சை முறை குறித்து பெரிய விவாதமே நடந்து வருகிறது.
சூரிய ஒளி சிகிச்சை பழங்கால முறை தான்
சூரிய ஒளியில் சிகிச்சை அளிப்பது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. இது மிகவும் பழமையான, ஆனால் சிறப்பாகச் செயல்படும் ஒரு முறையாகும். 18 மற்றும் 19-ஆம் நூற்றாண்டுகளில், ஆன்டிபயாடிக்ஸ் போன்ற மருந்துகளோ, தொழில்நுட்பங்களோ வருவதற்கு முன்பு இப்படித்தான் சிகிச்சை அளித்து வந்தனர். மருத்துவமனையின் நான்கு சுவர்களுக்குள் அடைந்து கிடப்பதை விட, நோயாளிகளை நல்ல காற்றோட்டமான இடத்திலும், வெயிலிலும் வைத்தால் வேகமாக குணமடைவதை அன்றைய மருத்துவர்கள் புரிந்துகொண்டனர்.
சூரிய ஒளி சிகிச்சை என்றால் என்ன?
இந்த முறைக்கு அப்போது ‘ஹீலியோதெரபி’ (Heliotherapy) என்று பெயர் இருந்தது. இப்போது இந்த பழைய சிகிச்சை முறையைத்தான் ஐரோப்பாவில் உள்ள பல மருத்துவமனைகள் மீண்டும் கொண்டு வந்துள்ளன. இதற்காக மருத்துவமனைகளின் வடிவமைப்பையே மாற்றுகின்றனர். பெரிய ஜன்னல்கள், திறந்த பால்கனிகள் மற்றும் மொட்டை மாடிகளை உருவாக்கி, அங்கு 'சன்லைட் ஸோன்' (Sunlight Zone) அமைக்கின்றனர்.
மிகவும் பலவீனமாக உள்ள நோயாளிகளை படுக்கை அல்லது வீல்சேருடன் அந்த பால்கனியிலோ, மொட்டை மாடியிலோ குறிப்பிட்ட நேரத்திற்கு வைக்கின்றனர். இப்படி திறந்த வெளியில், வெயிலில் இருக்கும்போது நோயாளிகள் மிக வேகமாக குணமடைவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
வெயிலில் இருந்தாலே நோய் குணமாகுமா?
ஆம், சூரிய ஒளி நம் தோல் மீது படும்போது, உடலே வைட்டமின் டி-யை உற்பத்தி செய்துகொள்ளும். இந்த வைட்டமின் டி, எலும்புகளை வலுவாக்குவது மட்டுமல்லாமல், தசைகளையும் சுறுசுறுப்பாக்குகிறது. அதுமட்டுமின்றி, ஹார்மோன்களின் செயல்பாட்டை ஒழுங்குபடுத்தி, நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.
மேலும், சூரிய ஒளி உடலில் 'செரோடோனின்' (Serotonin) எனப்படும் 'மகிழ்ச்சி ஹார்மோன்' அளவை அதிகரிக்கிறது. இதனால், நோயாளிக்கு மன அழுத்தம், பதட்டம் போன்றவை குறைகிறது. ஒருவர் வேகமாக குணமடைய வேண்டும் என்றால், மனநிலை நன்றாக இருப்பது மிகவும் முக்கியம்.
இந்தியாவிலும் பரவும் சூரிய ஒளி சிகிச்சை
இந்தியாவிலும் சில அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இந்த முறையைப் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். உதாரணமாக, நம் ஊரில் குழந்தைகளுக்கு எண்ணெய் தேய்த்து, இளவெயிலில் சிறிது நேரம் படுக்க வைக்கும் பழக்கம் பல வீடுகளில் இருக்கிறது அல்லவா? அதுவும் ஒரு வகையான சன் தெரபிதான். இப்போது, தீவிர நோயாளிகளுக்கும் இந்த சிகிச்சையை அளிக்கத் தொடங்கியுள்ளனர்.
முக்கிய எச்சரிக்கை: இந்த சன் தெரபி என்பது மருத்துவர்களின் கடுமையான கண்காணிப்பில், நோயாளியின் உடல்நிலையைப் பொறுத்து, காலை அல்லது மாலை நேரத்து இளவெயிலில் (Mild Sunlight) மட்டுமே சில நிமிடங்கள் அளிக்கப்படுகிறது. சுட்டெரிக்கும் மதிய வெயிலிலோ அல்லது மருத்துவர் அனுமதியின்றியோ தீவிர நோயாளிகளுக்கு இதைச் செய்யக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.

