- Home
- Tamil Nadu News
- தமிழகத்தில் ரவுடிகளின் அட்டகாசம் அதிகரிக்க ஆளுங்கட்சி தான் காரணம்! ஒரே போடாக போட்ட பாஜக பிரமுகர்!
தமிழகத்தில் ரவுடிகளின் அட்டகாசம் அதிகரிக்க ஆளுங்கட்சி தான் காரணம்! ஒரே போடாக போட்ட பாஜக பிரமுகர்!
தமிழகத்தில் தொடர்ந்து நிகழும் கொலைச் சம்பவங்கள் குறித்து பாஜக கவலை தெரிவித்துள்ளது. டி.பி. சத்திரம் கொலை சம்பவம் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டை எடுத்துக்காட்டுகிறது என்றும், அரசு இயந்திரத்தின் இயலாமையை வெளிப்படுத்துகிறது.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொலை சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணம் உள்ளது. சமீபத்தில் சென்னை டி.பி.சத்திரத்தில் பட்டப்பகலில் பொதுமக்கள் நிறைந்த பகுதிகளில் ராஜ்குமார் ஓட ஒட விரட்டி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பான வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக எதிர்க்கட்சி தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது என விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் னிப்பட்ட விரோதம் தான் இப்படுகொலைக்கு காரணம் என்று சொல்லி ஒவ்வொரு படுகொலைகளையும் கடந்து போய் விட துடிக்கிறது திராவிட மாடல் திமுக அரசு என நாராயணன் திருப்பதி குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக தமிழக பாஜக தலைமை செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: சென்னை டி.பி.சத்திரத்தில் ராஜ்குமார் என்ற நபரை சிலர் ஓட ஓட விரட்டி படுகொலை செய்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது. ஏனெனில் தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் பட்ட பகலிலேயே தெருக்களில் அன்றாடம் நடைபெறும் இது போன்ற படுகொலைகள் மாநிலத்தில் நிலவி வரும் சட்டம் ஒழுங்கு சீர்கேட்டை உணர்த்துவதால் வியப்பளிக்கவில்லை.
காவல்துறையின் மெத்தனத்தை, அரசு இயந்திரத்தின் இயலாமையை தொடர்ந்து வெளிக்கொண்டு வருகிறது. தனிப்பட்ட விரோதம் தான் இப்படுகொலைக்கு காரணம் என்று சொல்லி ஒவ்வொரு படுகொலைகளையும் கடந்து போய் விட துடிக்கிறது திராவிட மாடல் திமுக அரசு. ஒவ்வொரு முறையும் குற்றம் நடந்த பின்னர் குற்றவாளிகளை பிடித்து விட்டோம் என்று சொல்லி விவகாரத்தை முடித்து விடுகின்றனர்.
ஆனால், குற்றங்கள் நிகழாது தடுக்க தான் காவல் துறைக்கு அதிக அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளன என்பதை மறந்து விட்டதா காவல் துறை? காவல் துறையை சுதந்திரமாக செயல்பட அனுமதிக்காமல் அரசியல் பிரமுகர்களின் பாதுகாப்பு என்ற பெயரில் தொடர்ந்து அரசியலுக்காக பயன்படுத்துவதும், எதிர்க்கட்சியினரை ஒடுக்குவதற்கும் பயன்படுத்துவதினால் தான் சமூக விரோதிகள், ரௌடிகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது என்பதே மறுக்க முடியாத உண்மை. சட்ட ஒழுங்கை பராமரிப்பதும், குற்றங்கள் நிகழா வண்ணம் தடுப்பதும் தான் காவல்துறையின் கடமை என்பதை இந்த திராவிட மாடல் அரசு நிர்வாகம் உணருமா? என நாராயணன் திருப்பதி கேள்வி எழுப்பியுள்ளார்.