- Home
- Tamil Nadu News
- வெயிலின் ஆட்டம் ஆரம்பம்.. இதை மட்டும் பண்ணிடாதீங்க.. தமிழக அரசு முக்கிய வார்னிங்!
வெயிலின் ஆட்டம் ஆரம்பம்.. இதை மட்டும் பண்ணிடாதீங்க.. தமிழக அரசு முக்கிய வார்னிங்!
தமிழகத்தில் மார்ச் 22ம் தேதி மற்றும் 23ம் தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.

தமிழகத்தில் கொளுத்தும் வெயில்
தமிழகத்தில் கோடை வெயில் கொழுத்தியெடுக்க ஆரம்பித்துள்ளது. சென்னையில் இருந்து கன்னியாகுமரி வரை வெளியில் நடமாட முடியாத அளவுக்கு அனலின் தாக்கம் அதிகமாக உள்ளது. சில இடங்களில் 35 டிகிரி செல்சியசுக்கு மேல் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. வெயிலுக்கு பெயர்போன வேலூரில் கடந்த 24 மணி நேரத்தில் 37.2 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகி இருக்கிறது.
பகலில் வெளியே போகாதீங்க
இந்த நிலையில், தமிழகத்தில் சூரியன் சுட்டெரித்து வருவதால் மக்கள் பகலில் வெளியில் நடமாட வேண்டாம் என சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. அதாவது வெப்பத்தின் தாக்கம் உச்சத்தில் இருக்கும் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை தேவையற்ற பயணங்களைத் தவிர்க்கவும். குறிப்பாகச் சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணிகள் இந்த நேரங்களில் வீட்டிற்குள்ளேயே இருப்பது பாதுகாப்பானது என கூறியுள்ளது.
தொழிலாளர்களுக்கு அறிவுறுத்தல்
வெட்டவெளியில் வேலை செய்யும் கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் வெளிமாநிலத் தொழிலாளர்கள், நண்பகல் வேளையில் கடினமான பணிகளைச் செய்வதைத் தவிர்த்து ஓய்வெடுப்பது அவசியம். தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியே செல்ல நேர்ந்தால், காற்றோட்டமான பருத்தி ஆடைகளை அணியுங்கள். சூரிய ஒளியிலிருந்து காத்துக்கொள்ள குடை, தொப்பி மற்றும் தற்காப்புக் கண்ணாடிகளை (Sunglasses) மறக்காமல் எடுத்துச் செல்லுங்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இளநீர், நுங்கு பருகுங்கள்
மேலும் அதிக வெப்பத்தால் உடலில் நீர்ச்சத்து குறைந்து, அதன் விளைவாக வாந்தி, சோர்வு அல்லது தலைச்சுற்றல் ஏற்படக்கூடும் எனவும் காபி, தேநீர், மதுபானங்கள் மற்றும் பாட்டில்களில் அடைக்கப்பட்ட ரசாயனக் குளிர்பானங்களை தவிர்த்து உடலைக் குளிர்ச்சியாக வைத்திருக்க இளநீர், நுங்கு மற்றும் சத்தான பழச்சாறுகளை அதிக அளவில் பருகலாம் எனவும் சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது.
சென்னையில் வெயில் எப்படி?
தமிழகத்தில் மார்ச் 22ம் தேதி மற்றும் 23ம் தேதிகளில் தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 34-35° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையமும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

