- Home
- Tamil Nadu News
- தமிழகத்தில் போட்டுத்தாக்கும் வெயில்.. இந்த 3 மாவட்ட மக்கள் வெளியே வராதீங்க.. வானிலை மையம் வார்னிங்!
தமிழகத்தில் போட்டுத்தாக்கும் வெயில்.. இந்த 3 மாவட்ட மக்கள் வெளியே வராதீங்க.. வானிலை மையம் வார்னிங்!
ஒருபக்கம் வெயில் இருந்தாலும் மறுபக்கம் டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இது தொடர்பான முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தமிழகத்தில் வெயிலின் தாக்கம்
தமிழகத்தில் வெயிலின் உக்கிரம் இப்போதே ஆரம்பித்து விட்டது. பல்வேறு இடங்களில் வெளியில் நடமாட முடியாத அளவுக்கு வெயில் கொளுத்துகிறது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் இயல்பிலிருந்து 2-3° செல்சியஸ் வரை உயர்ந்து இருந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
3 மாவட்டங்களுக்கு வார்னிங்
அதாவது தமிழகத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் 2 -3° செல்சியஸ் இயல்பை யல்பை விட அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், வேலூர், ராணிபேட்டை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.
மழைக்கும் வாய்ப்பு
ஒருபக்கம் வெயில் இருந்தாலும் மறுபக்கம் டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று கன்னியாகுமரி மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
நீலகிரியில் மழை
நாளை (திங்கட்கிழமை) நீலகிரி மாவட்டம் மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மிக லேசான மழை பெய்யக்கூடும். 10ம் தேதி தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
டெல்டா, தென்மாவட்டங்கள்
11 மற்றும் 12ம் தேதிகளில் தென்தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் மிக லேசானது முதல் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம் மற்றும் புதுவையில் வறண்ட வானிலை நிலவக்கூடும். 13 மற்றும் 14ம் தேதிகளில் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக லேசான மழை பெய்யக்கூடும்.
ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். சென்னையில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மிக லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

