- Home
- Tamil Nadu News
- AIADMK: அதிமுகவில் விலகுவதாக கே.பி.எஸ். ராஜா அறிவிப்பு.. யார் இவர்? இபிஎஸ்-க்கு என்ன உறவு முறை தெரியுமா?
AIADMK: அதிமுகவில் விலகுவதாக கே.பி.எஸ். ராஜா அறிவிப்பு.. யார் இவர்? இபிஎஸ்-க்கு என்ன உறவு முறை தெரியுமா?
EPS: அதிமுகவில் அடுத்தடுத்து நிர்வாகிகள் விலகி வரும் நிலையில் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து இபிஎஸ்.யின் தாய்மாமா மகனும், மாநில எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளருமான கே.பி.எஸ். ராஜா அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தலில் தோல்வி
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக படுதோல்வியை சந்தித்தது. இதனையடுத்து 6 எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்தனர். அதேபோல் முன்னாள் அமைச்சர்கள், எம்.பி.க்கள் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பனையூர் அலுவலகத்திற்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர். இந்நிலையில் இபிஎஸ் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து அவரது தாய்மாமா மகனும், மாநில எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளருமான கே.பி.எஸ். ராஜா அதிமுகவில் இருந்து விலகுவதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் கே.பி.எஸ். ராஜா
இதுதொடர்பாக அதிமுக மாநில எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளரான கே.பி.எஸ். ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில்: நான் இந்த கழகத்தில் கடந்த 30 ஆண்டுகளாக கழக பணிக்காக உழைத்து வருகிறேன். ஜெயலலிதா எனக்கு மாவட்ட அம்மா பேரவை இணைச்செயலாளர், ஒன்றிய கழக செயலாளர், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணைச்செயலாளர் என பல கட்சிப் பொறுப்புகளை வழங்கினார். மேலும் அரசுப் பதவியிலான மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர், மாவட்ட திட்டக்குழு உறுப்பினர், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் லிட் தலைவர், மத்திய கூட்டுறவு வங்கியின் நிர்வாக குழு உறுப்பினர், பிஎஸ்என்எல் மாவட்ட ஆலோசனை குழு உறுப்பினர் என பல பொறுப்புகளில் என்னை அமர வைத்து மக்களுக்கு நற்பணிகளை செய்ய வாய்ப்பளித்தார். நானும் திறன்பட அதிமுகவின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்த்தேன்.
தொடர்ந்து வாய்ப்பு மறுப்பு
மேலும் நடந்து முடிந்த அனைத்து சட்டமன்ற தேர்தல்கள், நாடாளுமன்ற தேர்தல்கள், பத்துக்கும் மேற்பட்ட இடைத்தேர்தல்கள் மற்றும் அனைத்து உள்ளாட்சி மன்ற தேர்தல்களிலும் தமிழ்நாடு முழுவதும் கழகதிற்காக அயராது பாடுபட்டேன். மற்றும் அனைத்து போராட்டங்களிலும், மறியல்களிலும் கலந்து கொண்டு கழகத்திற்காக பாடுபட்டேன். பின்பு ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர், எடப்பாடி பழனிச்சாமி கழக பொதுச்செயலாளராக பொறுப்பேற்றார். அதன் பிறகு 10 ஆண்டு காலம் எனக்கு மக்கள் பணி செய்ய தொடர்ந்து வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது.
எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டு
புரட்சி தலைவி அம்மா ஜெயலலிதாவால் எனக்கு வழங்கப்பட்ட அந்தியூர் ஒன்றிய கழக செயலாளர் பதவியை காரணமே இல்லாமல் நீக்கியது எனக்கு அளித்த மிகப்பெரிய துரோகம். பின்பு இரண்டு முறையும் தகுதி இருந்தும் மக்கள் பணி செய்ய எனக்கு எம்.எல்.ஏ சீட் உள்நோக்கத்துடன் தர மறுத்துவிட்டார். ஆகவே இவரை பொறுத்தவரை பணத்திற்குத்தான் மரியாதை, எங்களைப்போன்ற கழகத்திற்கு உழைப்பவர்களுக்கு மரியாதை கிடையாது என்று உணர்ந்தோம். ஆகையால் கழகத்தில் எனது ஆதரவாளர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கலந்து ஆலோசித்து நானும் எனது ஆதரவாளர்களும் கழகத்தை விட்டு விலகுவதாக இதன்மூலம் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் விலகும் ஆதரவாளர் விவரத்தையும் வெளியிட்டுள்ளார்.

