தமிழகத்தில் 8 எக்ஸ்பிரஸ் ரயில்களில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு!
கோடைக்காலக் கூட்ட நெரிசலைச் சமாளிக்க சேலம் ரயில்வே கோட்டத்தில் 8 ரயில்களில் தற்காலிகமாகக் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளன.

கூடுதல் ரயில் பெட்டிகள் இணைப்பு
பயணிகளின் வசதியைக் கருத்தில் கொண்டும், கோடைக்காலக் கூட்ட நெரிசலைச் சமாளிக்கும் வகையிலும் சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட 8 ரயில்களில் தற்காலிகமாகக் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்ட அதிகாரி மரியா மைக்கேல் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
கோவை - மன்னார்குடி
கோவை - மன்னார்குடி (வண்டி எண்.16616) மற்றும் மன்னார்குடி - கோவை (16615) செம்மொழி தினசரி எக்ஸ்பிரஸ்: இன்று (வியாழக்கிழமை) முதல் ஜூலை 31 ஆம் தேதி வரை இந்த ரயில்களில் தற்காலிகமாக ஒரு கூடுதல் பெட்டி இணைக்கப்பட்டுள்ளது.
கோவை - திருப்பதி
கோவை - திருப்பதி (22616) மற்றும் திருப்பதி - கோவை (22615) வாரத்தில் 4 நாட்கள் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ்: இன்று முதல் ஜூலை 31 ஆம் தேதி வரை தற்காலிகமாக குளிரூட்டப்பட்ட ஒரு கூடுதல் பெட்டி இணைக்கப்படும்.
கோவை - நாகர்கோவில்
கோவை - நாகர்கோவில் (22668) தினசரி எக்ஸ்பிரஸ்: நாளை (வெள்ளிக்கிழமை) முதல் ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரையும், நாகர்கோவில் - கோவை (22667) தினசரி எக்ஸ்பிரஸ்: ஜூலை 12 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வரை தற்காலிகமாக ஒரு கூடுதல் பெட்டி இணைக்கப்படும்.
கோவை - ராமேஸ்வரம்
கோவை - ராமேஸ்வரம் (16618) வாராந்திர எக்ஸ்பிரஸ்: ஜூலை 15 ஆம் தேதி முதல் ஜூலை 29 ஆம் தேதி வரையும், ராமேஸ்வரம் - கோவை (16617) வாராந்திர எக்ஸ்பிரஸ்: ஜூலை 16 ஆம் தேதி முதல் ஜூலை 30 ஆம் தேதி வரை தற்காலிகமாக ஒரு கூடுதல் பெட்டி இணைக்கப்படும்.
பயணிகளின் வசதி மற்றும் நெரிசலைக் குறைக்கும் பொருட்டு இந்த தற்காலிக ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சேலம் ரயில்வே கோட்டம் தெரிவித்துள்ளது.