- Home
- Tamil Nadu News
- எம்ஜிஆர், ஜெயலலிதாமாதிரி இல்ல... ஈபிஎஸ் நம்ப வைத்து முதுகில் குத்திவிட்டார் - பிரேமலதா குமுறல்
எம்ஜிஆர், ஜெயலலிதாமாதிரி இல்ல... ஈபிஎஸ் நம்ப வைத்து முதுகில் குத்திவிட்டார் - பிரேமலதா குமுறல்
கூட்டணி ஒப்பந்தத்தை பின்பற்றாமல் எடப்பாடி பழனிசாமி தேமுதிக.வினரின் முதுகில் குத்திவிட்டதாகக் கூறி அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

அரசியல் தலைவர்கள் தீவிர சுற்றுப்பயணம்
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் அனைவரும் தீவிர சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இல்லம் தேடி உள்ளம் நாடி என்ற பெயரில் தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகின்றார்.
தேமுதிக பூத் கமிட்டி மீட்டிங்
இதனிடையே தென்சென்னை பூத் கமிட்டி முகவர்கள் கூட்டமானது சென்னை தியாகராய நகரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் பங்கேற்று கட்சி நிர்வாகிகள் மத்தியில் உரையாற்றினார்.
முதுகில் குத்திய எடப்பாடி பழனிசாமி
அப்போது அவர் பேசுகையில், கடந்த தேர்தலின் போது கூட்டணி பேச்சுவார்த்தையின் அடிப்படையில் தேமுதிக.வுக்கு எம்.பி. சீட் ஒதுக்குவதாக ஒப்பந்தம் போட்டுக் கொண்டது உண்மை தான். ஆனால் அரசியல் நாகரிகம் கருதி இதற்கான ஆதாரத்தை நாம் வெளியிடவில்லை.
முன்னாள் முதல்வர்களான எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் கூட்டணி ஒப்பந்தங்கள் தேதி குறிப்பிடாமல் இறுதி செய்யப்படுவது வழக்கம். அந்த அடிப்படையில் தான் எடப்பாடி பழனிசாமியுடனும் தேதி குறிப்பிடாமல் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது. ஆனால் வாக்குறுதியை நிறைவேற்றாமல் எடப்பாடி பழனிசாமி முதுகில் குத்தி நம்மை ஏமாற்றி விட்டார்.
பணம் கொடுத்து அழைத்து வரப்படும் மக்கள்
எடப்பாடி பழனிசாமியின் கூட்டத்திற்கு வரும் மக்கள் அனைவரும் பணம் கொடுத்து தான் அழைத்து வரப்படுகிறார்கள். ஆனால், நாம் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபடுவது கிடையாது. அதனால் அவர்களை நாம் கவனத்தில் கொள்ளவேண்டியது இல்லை என்று கூறியுள்ளார்.