- Home
- Tamil Nadu News
- சினிமாவை மிஞ்சும் த்ரிலிங்.. லாட்ஜில் மாலதியுடன் தங்கியிருந்த யூடியூபர் சவுக்கு சங்கர் கைதானது எப்படி? பரபரப்பு தகவல்
சினிமாவை மிஞ்சும் த்ரிலிங்.. லாட்ஜில் மாலதியுடன் தங்கியிருந்த யூடியூபர் சவுக்கு சங்கர் கைதானது எப்படி? பரபரப்பு தகவல்
ஜாமீன் நிபந்தனைகளை மீறி தலைமறைவாக இருந்த யூடியூபர் சவுக்கு சங்கரை, சென்னை தனிப்படை போலீசார் ஆந்திராவில் கைது செய்தனர். சித்தூரில் உள்ள ஒரு லாட்ஜில் தங்கியிருந்த அவரை, அவரது தோழியுடன் போலீசார் கைது செய்தனர்.

பிரபல யூடியூபரும், அரசியல் விமர்சகருமான சவுக்கு சங்கர் சினிமா தயாரிப்பாளரை மிரட்டி பணம் பறித்த வழக்கில் ஆதம்பாக்கம் மற்றும் சைதாப்பேட்டை போலீசாரால் கடந்த டிசம்பர் மாதம் 13ம் தேதி கைது செய்யப்பட்டு நீதிமன்றம் உத்தரவுப்படி 14 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து, சவுக்கு சங்கருக்கு உடல்நிலையை காரணம் காட்டி ஜாமீனில் விடுவிக்கக் கோரி, அவரது தாய் கமலா சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
அந்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சவுக்கு சங்கருக்கு மார்ச் 25 வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இந்நிலையில் மருத்துவ காரணங்களுக்காக ஜாமீன் பெற்ற சவுக்கு சங்கர் ஜாமீன் நிபந்தனைகளை மீறி வீடியோக்களை பதிவிடுவதாகவும், விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை. ஆகையால் அவரது ஜாமீனை ரத்து செய்யக்கோரி காவல்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இதுதொடர்பான விசாரணை நீதிபதி பி.வேல்முருகன், ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சவுக்கு சங்கர் ஜாமீன் நிபந்தனைகளை மீறியதாக தெரியவந்தால் அவரை கைது செய்யலாம் என்று உத்தரவிட்டது. இதற்கிடையே, கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி சவுக்கு சங்கர் தாயார் மருத்துவ சிகிச்சை மற்றும் ஜாமீன் கேட்டு தொடர்ந்த மனு தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
சவுக்கு சங்கர் இடைக்கால ஜாமீன் முடிவதால், அவர் சரணடைய வேண்டும் எனவும் இல்லையென்றால் அவர் மீது போலீசார் உரிய சட்ட நடவடிக்கை எடுக்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். மார்ச் 25ம் தேதிக்கு பிறகு நீதிமன்றத்தில் சரணடைய வேண்டிய சவுக்கு சங்கர் தலைமறைவாக இருந்து வந்தார். அதே நேரத்தில் யூடியூப்பில் வீடியோக்களை தொடர்ந்து சவுக்கு சங்கர் பதிவிட்டு வந்தார்.
இந்நிலையில் தன் மீதான 2 வழக்குகளையும் சிபிஐ விசாரணைக்கு மாற்றக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சவுக்கு சங்கர் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதி நிர்மல்குமார் முன்பாக நேற்று முன்தினம் விசாரணைக்கு நடந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் சவுக்கு சங்கர் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருவதால் அவரை தலைமறைவு குற்றவாளியாக அறிவித்து சென்னை போலீசார் தேடி வருவதாக தெரிவித்தார். மேலும் சிபிஐ விசாரணை கோரும் 2 வழக்குகளிலும் ஏற்கெனவே விசாரணை முடிக்கப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து ழக்கு விசாரணையை வரும் ஏப்ரல் 27ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.
இது ஒருபுறம் இருக்க தலைமறைவான சவுக்கு சங்கரை தனிப்படை அமைத்து சென்னை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில், சவுக்கு சங்கர் ஆந்திரா மாநிலம் சித்தூரில் உள்ள ஒரு லாட்ஜ் ஒன்றில் தங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, ஆந்திரா விரைந்த சென்னை போலீசார் சவுக்கு சங்கரை கைது செய்தனர். அவருடன் தங்கியிருந்த அவரது தோழி மாலதியும் கைது செய்யப்பட்டார்.

