- Home
- Tamil Nadu News
- வரிசைக்கட்டி வரும் விடுமுறை.. பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த போக்குவரத்து துறை!
வரிசைக்கட்டி வரும் விடுமுறை.. பொதுமக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த போக்குவரத்து துறை!
Holiday Special Buses: சென்னை மற்றும் பிற நகரங்களிலிருந்து பல்வேறு ஊர்களுக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுவதுடன், பயணிகள் திரும்ப வசதியாக சிறப்பு பேருந்துகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

விடுமுறை என்றாலே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஒரே கொண்டாட்டம் தான். அதுவும் தொடர் விடுமுறை என்றால் சொல்லவே வேண்டாம். அதன்படி வார இறுதி நாட்கள், தொடர் விடுமுறை மற்றும் பண்டிகை நாட்கள், பவுர்ணமி, அமாவாசை ஆகிய தினங்களில் தமிழக போக்குவரத்துத்துறை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பயணிகள் சொந்த ஊர் செல்ல சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தொடர் விடுமுறை, தமிழ் வருட பிறப்பு, மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக போக்குவரத்துறை வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்: ஏப்ரல் 10 (வெள்ளிக்கிழமை) ஏப்ரல் 11 (சனிக்கிழமை). மற்றும் ஏப்ரல் 12 (ஞாயிற்றுக் கிழமை) வார விடுமுறை மற்றும் ஏப்ரல் 14 (செவ்வாய்கிழமை) தமிழ் வருட பிறப்பு ஆகிய நாட்களில் தொடர்விடுமுறையை முன்னிட்டு சென்னையிலிருந்தும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. அந்த வகையில் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு ஏப்ரல் 10ம் தேதி வெள்ளிக்கிழமை அன்று 575 பேருந்துகளும், ஏப்ரல் 11ம் தேதி சனிக்கிழமை 395 பேருந்துகளும் இயக்கப்படுகிறது.
சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு ஏப்ரல் 10 அன்று 100 பேருந்துகளும், மற்றும் ஏப்ரல் 11 அன்று 90 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மாதாவரத்திலிருந்து ஏப்ரல் 10 மற்றும் 11 ஆகிய நாட்களுக்கு 24 பேருந்துகளும் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது மட்டுமில்லாமல் ஞாயிறு மற்றும் செவ்வாய் ஆகிய தினங்களில் சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் ஏப்ரல் 12 (ஞாயிற்றுக்கிழமை) மற்றும் 14 (செவ்வாய்கிழமை) ஆகிய நாட்களில் 735 சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வார இறுதியில் வெள்ளிக்கிழமை அன்று 11,104 பயணிகளும் சனிக்கிழமை அன்று 5,231 பயணிகளும், ஞாயிற்றுக்கிழமை அன்று 6,562 பயணிகளும் மற்றும் ஏப்ரல் 14 அன்று 5,285 பயணிகளும் பயணம் மேற்கொள்ள முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு www.tnstc.in மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

