- Home
- Tamil Nadu News
- காலையில் மண்டையை பிளக்கும் வெயில்... மாலையில் வெளுத்து வாங்கும் கனமழை.. வானிலை மையம் சூப்பர் அப்டேட்
காலையில் மண்டையை பிளக்கும் வெயில்... மாலையில் வெளுத்து வாங்கும் கனமழை.. வானிலை மையம் சூப்பர் அப்டேட்
தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்து வந்தாலும் அவ்வப்போது ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் இடியுடன் கூடிய மழை பெய்தது.

தமிழகத்தில் எப்போதும் இல்லாத வகையில் இம்முறை பிப்ரவரி மாதம் கடைசியில் இருந்தே வெயில் உக்கிரமாக இருந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெயில் செல்வதற்கே அஞ்சு நடுங்குகின்றனர். இந்நிலையில் தற்போது கோடைக்காலம் தொடங்கியதை அடுத்து வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த ஆண்டு எல்நினோ தாக்கத்தால் இந்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி நேற்று தமிழகத்தில் 4 இடங்களில் வெயில் சதம் அடித்தது. அதிகபட்சமாக ஈரோட்டில் 104 டிகிரி வெப்பம் பதிவானது. வெயில் சுட்டெரித்து வந்தாலும் அவ்வப்போது ஒரு சில இடங்களில் கோடை மழை பெய்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் இடியுடன் கூடிய மழை பெய்தது. இந்நிலையில் ஒரு சில மாவட்டங்களில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்கும் என்று வானிலை மையம் எச்சரித்துள்ளது.
சுமார் 0.9 கிமீ உயரத்தில் சத்தீஸ்கர் முதல் மன்னார் வளைகுடா வரை தெலங்கானா, ராயலசீமா, உள் தமிழகம் வழியாக ஒரு வளிமண்டல காற்றழுத்த தாழ்வு பாதை (Trough) நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தென் தமிழகம், கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் மற்ற இடங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவித்துள்ளது.
அதேபோல் நாளை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏப்ரல் 10 மற்றும் 11 மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மற்ற இடங்களான தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 12 தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஏப்ரல் 13 மற்றும் 14ம் தேதி தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
அதிகபட்ச வெப்ப அளவின் வேறுபாடு
இன்று முதல் 12 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
சென்னை வானிலை அப்டேட்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று மற்றும் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

