திருப்பதிக்கு டஃப் கொடுக்கும் திருவண்ணாமலை? உண்டியல் காணிக்கை இத்தனை கோடியா?
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் பங்குனி மாத உண்டியல் காணிக்கையாக ரூ.5 கோடியே 44 லட்சத்து 37 ஆயிரத்து 70 ரூபாய் ரொக்கமும், 225 கிராம் தங்கமும் பக்தர்களால் செலுத்தப்பட்டுள்ளது.

உலகப் பிரசித்தி பெற்ற கோவில்களில் ஒன்று திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில். இக்கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில், அக்னி ஸ்தலமாகவும் நினைத்தாலே முக்தி அளிக்கும் புண்ணிய திருத்தலமாக விளங்கிறது. அண்ணாமலையார் கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். இதில் மாதாமாதம் வரும் பவுர்ணமி கிரிவலமும், ஆண்டுக்கு ஒருமுறை வரும் கார்த்திகை தீபத் திருவிழாவும் உலக பிரசித்தி பெற்றது.
இங்கு சிவனே மலை வடிவமாக காட்சி தருவதாக ஐதீகம். அண்ணாமலையாரை வழிப்பட்டு இங்குள்ள 14 கிலோ மீட்டர் அளவிலான சுற்றுவட்டப்பாதையில் மாதந்தோறும் வரும் பவுர்ணமி தினத்தன்று வெளியூர் மற்றும் வெளிமாநிலத்தில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வருவது வழக்கம். குறிப்பாக ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, கர்நாடகா மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாரை வழிபட்டு செல்கின்றனர்.
நினைத்த வேண்டுதல் நிறைவேறிய பிறகு பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனாக பணம் மற்றும் தங்கம், வெள்ளி பொருட்கள் போன்றவற்றை அண்ணாமலையார் கோயில் உண்டியலில் காணிக்கையாக செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று அண்ணாமலையார் கோயிலில் பங்குனி மாத பவுர்ணமி உள்ளிட்ட நாட்களில் ஆன்மீக பக்தர்கள் மூலமாக கோவிலுக்கு காணிக்கையாக வந்த பணத்தினை 200க்கும் மேற்பட்ட ஊழியர்கள் மூலம் திருக்கல்யாண மண்டபத்தில் எண்ணும் பணி நடைபெற்றது.
மேலும், கிரிவலப் பாதையில் உள்ள இந்திர லிங்கம், அக்னி லிங்கம், எம லிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் உள்ளிட்ட அஷ்ட லிங்கத்தில் வைக்கப்பட்ட உண்டியல்கள் என அனைத்து எண்ணும் பணி சிசிடிவி கேமிரா மூலம் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் அண்ணாமலையார் கோயிலில் பங்குனி மாத உண்டியல் காணிக்கையாக ரூ.5 கோடியே 44 லட்சத்து 37 ஆயிரத்து 70 ரூபாய் ரொக்கப் பணமும், 225 கிராம் தங்கமும், 2 கிலோ 750 கிராம் வெள்ளியும் பக்தர்கள் காணிக்கையாக அளித்துள்ளனர். திருப்பதிக்கே டஃப் கொடுக்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மாதம் மாதம் உண்டியல் காணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

