- Home
- Tamil Nadu News
- சுட்டெரிக்கும் வெயில்.. அடிச்சு தும்சம் செய்யப்போகும் மழை.. எந்தெந்த பகுதியில்.. சென்னையில் நிலவரம் என்ன?
சுட்டெரிக்கும் வெயில்.. அடிச்சு தும்சம் செய்யப்போகும் மழை.. எந்தெந்த பகுதியில்.. சென்னையில் நிலவரம் என்ன?
Tamilnadu Rain: தமிழகத்தில் கோடை வெயில் 100 டிகிரியைத் தாண்டி பதிவாகி வரும் நிலையில், சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வீட்டில் முடங்கும் மக்கள்
தமிழகத்தில் கோடை வெயில் நாளுக்கு நாள் உச்சம் அடைந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் பகல் நேரங்களில் வெளியில் செல்வதை முற்றிலுமாக தவிர்த்து வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் பல்வேறு இடங்களில் வெயில் சதம் அடித்து வருகிறது. அதாவது கரூர் பரமத்தி, ஈரோடு, வேலூர், நாமக்கல், திருப்பத்தூர், பாளையங்கோட்டை, மதுரை ஏர்போர்ட், திருச்சி உள்ளிட்ட இடங்களில் நேற்று 100 டிகிரிக்கு மேல் வெயில் பதிவானது. இந்நிலையில் வரும் நாட்களில் வெயில் அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு
இந்நிலையில் இன்று தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதேபோல் நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரியில் மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளது.
லேசானது முதல் மிதமான மழை எச்சரிக்கை
ஏப்ரல் 11 மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். ஏப்ரல் 12 தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். மற்ற இடங்களில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
மேலும் ஏப்ரல் 13 மற்றும் 14 தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். ஏப்ரல் 15 மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என தெரிவித்துள்ளது.
வெப்பம் அதிகரிக்கும்
இன்று முதல் 11 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி இருக்கக்கூடும். ஏப்ரல் 12 மற்றும் 13 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் 2-3° செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும் என கணித்துள்ளது. அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம் என தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை முன்னறிவிப்பு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அதேபோல் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37-38° செல்சியஸை ஒட்டியும். குறைந்தபட்ச வெப்பநிலை 28° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
இன்று தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

