- Home
- Tamil Nadu News
- கோவை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! அடுத்த 3 மணிநேரத்தில் சென்னையில் சம்பவம் இருக்காம்!
கோவை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை! அடுத்த 3 மணிநேரத்தில் சென்னையில் சம்பவம் இருக்காம்!
தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளதால் வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

காற்றழுத்த தாழ்வுப்பகுதி
தமிழகத்தில் கத்திரி வெயில் தொடங்கியது முதலே சென்னை, விழுப்புரம், திரவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்திய கிழக்கு அரபிக்கடலில் நாளை வாக்கில் ஒருவளி மேலடுக்கு சுழற்சி உருவாகக்கூடும். இதன் காரணமாக, 22ம் தேதி வாக்கில், அதே பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும். பிறகு இது வடக்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையக் கூடும்.
கனமழை எச்சரிக்கை
இதன் காரணமாக வடதமிழகத்தில் அநேக இடங்களிலும், தென்தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், திருப்பத்தூர், வேலூர், ராணிபேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும், நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் வானிலை நிலவரம்
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 முதல் 34 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 முதல் 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
அடுத்த 3 மணிநேரத்தில் கனமழை எச்சரிக்கை
இதனிடையே அடுத்த 3 மணிநேரத்திற்கு அதாவது காலை 10 மணிவரை 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. அதாவது சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.