- Home
- Tamil Nadu News
- ஓபிஎஸ் திமுகவில் இணைந்ததுக்கு இவர்தான் காரணம்! இபிஎஸ்-க்கு சாபம் விட்ட சசிகலா! என்ன சொல்லி தெரியுமா?
ஓபிஎஸ் திமுகவில் இணைந்ததுக்கு இவர்தான் காரணம்! இபிஎஸ்-க்கு சாபம் விட்ட சசிகலா! என்ன சொல்லி தெரியுமா?
இதற்கெல்லாம் காரணம் தான் மட்டும்தான் அதிமுக என்று தம்பட்டம் அடித்துக்கொண்டு தனக்கு தானே தலைவராக அறிவித்து கொண்ட இபிஎஸ் தான் என சசிகலா விமர்சித்துள்ளார்.

ஓபிஎஸ்-ஐ இணைக்க மறுப்பு
எடப்பாடி பழனிசாமி சூழ்ச்சியால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம் எந்த நிபந்தனையுடன் கட்சியில் இணைய தயார் பலமுறை கூறிவந்தார். ஆனால், அதிமுகவில் ஒருபோதும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடமில்லை என இபிஎஸ் திட்டவட்டமாக கூறிவந்தார். இதனையடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் ஓபிஎஸ் தனது ஆதரவாளர்களுடன் தொடர்ந்து ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார். இந்நிலையில் இபிஎஸ்-ஐ வீழ்த்த திமுகவுடன் இணைய ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்தார்.
திமுகவில் இணைந்த ஓபிஎஸ்
அதன்படி இன்று அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் போடிநாயக்கனூர் தொகுதி எம்எல்ஏ ஓ.பன்னீர்செல்வம், உசிலப்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் ஆகியோர் திமுகவில் இணைந்த கையோடு தனது எம்எல்ஏ பதவிகளை ராஜினாமா செய்தனர். திமுகவில் ஓபிஎஸ் இணைந்தபோது துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, சேகர்பாபு ஆகியோர் உடன் இருந்தனர். இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் திமுகவில் இணைந்தது தொடர்பாக சசிகலா பரபரப்பு கருத்தை தெரிவித்துள்ளார். அதாவது இந்த நிலைமைகளுக்கெல்லாம் காரணம் ஒன்றே ஒன்றுதான். தான் மட்டும்தான் அதிமுக என்று தம்பட்டம் அடித்துக்கொண்டு தனக்கு தானே தலைவராக அறிவித்து கொண்ட இபிஎஸ் தான் என சசிகலா கடுமையாக விமர்சித்துள்ளார்.
சசிகலா பரபரப்பு அறிக்கை
இதுதொடர்பாக சசிகலா வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: தமிழக முன்னாள் முதலமைச்சரும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூத்த முன்னோடியும், சட்டமன்ற உறுப்பினருமான ஓ.பன்னீர்செல்வம் அவர்களின் இந்த முடிவு மிகவும் துரதிருஷ்டவசமானது. தமிழகத்திலிருந்து அகற்றப்படவேண்டிய ஒரு தீய சக்தியாக திமுக விளங்கும் நிலையில் தாய் கழகம் என்று நினைத்து கொண்டு திமுகவில் தங்களை இணைத்துக்கொள்வது ஒரு தவறான முடிவாகத்தான் அமைந்துள்ளது.
அழிவுகாலம் நெருங்கிவிட்டது
ஆனால் இந்த நிலைமைகளுக்கெல்லாம் காரணம் ஒன்றே ஒன்றுதான். அவர் வேறு யாருமில்லை. தான் மட்டும்தான் அதிமுக என்று தம்பட்டம் அடித்துக்கொண்டு தனக்கு தானே தலைவராக அறிவித்துக் கொண்டவர்கள், தன்னை சுற்றியுள்ளவர்களையும் ஏமாற்றிக் கொண்டிருப்பவர்கள், திமுகவினரின் முழு கட்டுப்பாட்டில் இருந்து கொண்டு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் உள்ள அனைவரையும் வெளியேற்றி விட்டு புரட்சித்தலைவர் மற்றும் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் கொள்கைகளுக்கு விரோதமாக தொடர்ந்து செயல்பட்டுவரும் துரோகிகளின் அழிவுகாலம் நெருங்கிவிட்டது.
துரோகிகளையும் வீழ்த்துவது உறுதி
இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலில் எனது தலைமையில் புரட்சித்தலைவரின் ரத்தத்தின் ரத்தங்களும், புரட்சித்தலைவி அம்மா அவர்களின் வழிவந்த சிங்கங்களும் எதிரிகளையும் துரோகிகளையும் வீழ்த்துவது உறுதி என தெரிவித்துள்ளார்.

