- Home
- Tamil Nadu News
- திமுகவில் இணைந்த கையோடு ஓபிஎஸ் சொன்ன அந்த வார்த்தை! அலறும் இபிஎஸ்! அதிர்ச்சியில் தென் மாவட்ட அதிமுக
திமுகவில் இணைந்த கையோடு ஓபிஎஸ் சொன்ன அந்த வார்த்தை! அலறும் இபிஎஸ்! அதிர்ச்சியில் தென் மாவட்ட அதிமுக
ஒரு அரசியல் இயக்கத்தை அரவணைப்போடு எப்படி நடத்த வேண்டும் என்கிற இலக்கணத்தோடு தளபதி திமுகவை வழிநடத்துகிறார். இனிமேல் அரசியலில் தளபதி எடுக்கின்ற முடிவுக்கு நான் கட்டுப்படுவேன்.

முன்னாள் முதல்வரும், போடிநாயக்கனூர் தொகுதி எம்எல்ஏவுமான ஓ.பன்னீர்செல்வம், அவரது மகனும், முன்னாள் எம்.பி.யுமான ரவீந்திரநாத் மற்றும் உசிலப்பட்டி எம்எல்ஏ ஐயப்பன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். இதனையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஓபிஎஸ்: பேரறிஞர் அண்ணா ஆரம்பித்த தாய்க்கழகமான திமுகவில் இணைவது மகிழ்ச்சி. திமுகவில் தொண்டனாகத்தான் இன்று இணைந்திருக்கிறேன்.
திமுக வளர்ச்சிக்கு தொண்டனாக பாடுபடுவேன். பாசத்தோடு அரவணைத்த தளபதிக்கு நன்றி. அண்ணா, கலைஞர் காட்டிய வழியில் முதலமைச்சர் ஆனதில் இருந்து சாதி, மத பேதம் இல்லாமல் அனைத்து மக்களையும் அரவணைத்து எல்லாருக்கும் திட்டங்கள் சென்று சேரும் வகையில் தாயுள்ளத்தோடு ஆட்சி நடத்தி வருகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
ஒரு அரசியல் இயக்கத்தை அரவணைப்போடு எப்படி நடத்த வேண்டும் என்கிற இலக்கணத்தோடு தளபதி திமுகவை வழிநடத்தி சென்று வருகிறார். இனிமேல் அரசியலில் தளபதி எடுக்கின்ற முடிவுக்கு நான் முழுமையான கட்டுப்படுவேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். திமுகவை தீய சக்தி என்று நான் என்றைக்குமே சொன்னது கிடையாது.
எடப்பாடி பழனிசாமி அதிகாரப் போக்குடன் செயல்படுகிறார். அவர் அதிமுகவை அழிவுப்பாதைக்கு கொண்டு செல்கிறார். தென் மாவட்டத்தில் எந்த தலைவரும் வளர்ந்து விடக்கூடாது என்பதில் எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார். அதிமுகவின் தற்காலிக பொதுச்செயலாளர் சர்வாதிகாரியாக நடந்து கொள்ளும் எடப்பாடி பழனிசாமி என்றும் வெல்ல முடியாத சூழலை உருவாக்கி உள்ளார். இபிஎஸ்க்கு தலைமைப்பண்பு இல்லை என்று ஓபிஎஸ் கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஏற்கனவே இடஒதுக்கீடு விவகாரத்தில் தென்மாவட்ட மக்கள் இபிஎஸ் மீது அதிருப்தியில் இருந்து வரும் நிலையில் ஓபிஎஸ் தென் மாவட்டத்தில் எந்த தலைவரும் வளர்ந்து விடக்கூடாது என்று இபிஎஸ் இருப்பதாக கூறியுள்ளது அதிமுகவினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

