- Home
- Tamil Nadu News
- உங்களால் நான்.. உங்களுக்காகவே நான்.. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு தினம்
உங்களால் நான்.. உங்களுக்காகவே நான்.. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு தினம்
எம்ஜிஆர் மறைவுக்கு பி்ன்னர் அதிமுகவுக்கு மீண்டும் உயிர் கொடுத்து அக்கட்சியை 4 முறை அரியணையில் ஏற்றிய முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 9ம் ஆண்டு நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது.

கோமளவள்ளி டூ ஜெயலலிதா
கர்நாடகா மாநிலம் மாண்டியாவில் கோமளவல்லியாக பிறந்து ஜெயலலிதாவாக தனது பெயரை மாற்றிக் கொண்டார். வெறும் 13 வயதில் கன்னட திரைப்படத்தில் நடித்த ஜெயலலிதா பின்னர் 1965ம் ஆண்டு வெண்ணிற ஆடை திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் உடன் இணைந்து 28 படங்கள் நடித்தார். இதில் 25 படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. தமிழ், இந்தி, தெலுங்கு, ஆங்கிலம் என மொத்தமாக 140க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார்.
அதிமுக கொபசெ முதல் பொதுச்செயலாளர்..
திரைத்துறையில் உச்சம் தொட்ட ஜெயலலிதா 1982ம் ஆண்டு அதிமுகவில் இணைந்தார். மக்களுக்கு ஏற்கனவே பிரபலமான முகம் என்பதால் இவரை கொள்கை பரப்பு செயலாளராக நியமித்தார் எம்ஜிஆர். 1984ல் ராஜ்யசபா உறுப்பினரான ஜெயலலிதா 1987ல் எம்ஜிஆர் மறைவுக்கு பின்னர் ஜா (ஜானகி) அணி ஜெ (ஜெயலலிதா) அணி என கட்சி பிளவு பட்டது. அதன் பின்னர் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அணிக்கு அதிகமான உறுப்பினர்கள் கிடைக்கவே அதிமுகவை ஜெயலலிதாவிடம் ஒப்படைத்துவிட்டு அரசியலை விட்டு விலகினார்.
சபதமேற்ற ஜெயலலிதா..!
1989ம் ஆண்டு ஆளும் திமுக உறுப்பினர்களால் சட்டமன்றத்திற்குள்ளேயே அவமதிக்கப்பட்ட ஜெயலலிதா தாக்குதலுக்கும் உட்படுத்தப்பட்டார். அவரது ஆடைகள் சேதப்படுத்தப்பட்டு அவமதிக்கப்பட்ட நிலையில், “என் வாழ்வின் மிக மோசமான நாள்” என்று குறிப்பிட்டு இனி முதல்வராக தான் இந்த அவைக்குள் வருவேன் என்று சபதமமேற்று அதனை வென்றும் காட்டினார்.
அரியணையில் அதிமுக..!
1991ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் 225 இடங்களைக் கைப்பற்றி புதிய வரலாறு படைத்து முதல்வராக பொறுப்பேற்றார். அதன் பின்னர் 2001, 2011, 2016ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தல்களில் வெற்றி பெற்று முதல்வரானார்.
ஜெயலலிதாவின் முத்தான திட்டங்கள்
தொட்டில் குழந்தை திட்டம், காவல் துறையில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு, மாணவர்களுக்கு இலவச லேப்டாப், அம்மா உணவகம், ஏழைகளுக்கு விலையில்லா ஆடு, மாடுகள், கோவில்களில் அன்னதானம், தாலிக்கு தங்கம், திருநங்கைகளுக்கு மாதாந்திர உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தமிழக மக்களுக்காக வழங்கினார். இதில் பல திட்டங்கள் இந்தியாவுக்கே முன்னுதாரணமாக அமைந்தன.
100 ஆண்டுகள் உயிர்ப்புடன் இருக்கும்..?
2016ம் ஆண்டு பதவியேற்ற பின்னர் ஏற்பட்ட உடல்நலக் குறைவு காரணமாக பல முக்கிய நிகழ்வுகளில் கலந்து கொள்ள முடியாமல் சிரமமடைந்தார். பின்னர் செப்டம்பர் 22ம் தேதி அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சுமார் 70 நாட்கள் தீவிர சிகிச்சை பெற்று பின்னர் சிகிச்சை பலன் இன்று உயிரிழந்தார். தேர்தல் பிரசாரத்தின் போது எனக்கு பின்னரும் இந்த இயக்கம் 100 ஆண்டுகள் உயிர்ப்புடன் இருக்கும் என்று கர்ஜித்தார். ஆனால் அந்த இயக்கம் தற்போது எந்த நிலையில் இருக்கிறது என்பதை யாரும் விளக்கி தான் தெரிய வேண்டும் என்ற நிலை இல்லை...

