- Home
- Tamil Nadu News
- AIADMK: அதிமுக முன்னாள் அமைச்சர் தவெகவில் இணைவது உறுதியாகிறதா? மழுப்பலான பதில்.. இபிஎஸ் அதிர்ச்சி!
AIADMK: அதிமுக முன்னாள் அமைச்சர் தவெகவில் இணைவது உறுதியாகிறதா? மழுப்பலான பதில்.. இபிஎஸ் அதிர்ச்சி!
Vijayabaskar: தமிழக சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெற்றதை அடுத்து, அதிமுக எம்எல்ஏக்கள் சிலர் அக்கட்சிக்கு ஆதரவளித்ததால் அக்கட்சியில் குழப்பம் ஏற்பட்டது. எடப்பாடி பழனிசாமியுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, முன்னாள் அமைச்சர் தவெகவில் இணைவது உறுதி.

நடந்து முடிந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 107 இடங்களில் வெற்றி பெற்றதை அடுத்து முதல்வராக விஜய் பொறுப்பேற்றுக்கொண்டார். இதனையடுத்து சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி உத்தரவை மீறி சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தலைமையிலான 25 எம்.எல்.ஏ-க்கள் தவெக அரசுக்கு ஆதரவு அளித்து அதிர்ச்சி கொடுத்தனர். இதனால் கடும் கோபத்தின் உச்சிக்கே சென்ற இபிஎஸ் மாவட்ட செயலாளர்கள் பதவியை பறித்தது மட்டுமல்லாமல் தகுதிநீக்கம் செய்ய சபாநாயகரிடம் மனு அளித்திருந்தனர். அதேபோல் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்பும் சபாநாயகரை சந்தித்து மனு அளித்திருந்தனர். இதனால் அதிமுகவில் அடுத்த என்ன நடக்கப்போகிறது என்ற பரபரப்பு ஏற்பட்டது.
ஆனால், தவெக அமைச்சரவையில் தங்களுக்கு இடம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி தரப்புக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதனையடுத்து வேலுமணி உள்ளிட்டோர் இபிஎஸ்-ஐ சந்தித்து சமாதான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்தது. இதனிடையே இசக்கி சுப்பையா, மரகதம் குமரவேல் உள்ளிட்ட 4 அதிமுக எம்எல்ஏக்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து ஆளும் தவெகவில் இணைந்து அதிர்ச்சி கொடுத்தனர்.
சமாதானம் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து இரு தரப்பும் தகுதிநீக்க புகார்களை வாபஸ் பெற்றன. ஆனால், இந்த சமாதானக் கூட்டத்தில் சி.வி.சண்முகம், விஜயபாஸ்கர், அருண்மொழித்தேவன் உள்ளிட்டோர் இபிஎஸ்-ஐ சந்திக்கவில்லை. இதனால் இவர்களின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பது தெரியாததால் அதிமுகவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம் மற்றும் விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் தனித்தனியாக தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டு வந்தனர்.
குறிப்பாக முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சர் சி.வி.விஜயபாஸ்கர் இலுப்பூர் இல்லத்தில் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தை கூட்டினார். அப்போது அவர்களிடம் அதிமுகவில் தொடர்வதா? தவெகவுக்கு செல்வதா? என்று நிர்வாகிகளிடம் கருத்துகளை கேட்டறிந்தார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த விஜயபாஸ்கர்: 62,000 வாக்குகள் வித்தியாசத்தில் ஒரு மாபெரும் வெற்றியை தேடிதந்த மக்களுக்கு நான் நன்றியுடையவனாக இருக்க வேண்டும். அதேபோல் அதிமுக நிர்வாகிகளின் கருத்தையும் கேட்க வேண்டியிருக்கிறது. அதன்பிறகு எனது முடிவை சொல்வேன் என்று கூறியிருந்தார். என்னுடைய தொகுதி மக்கள் முடிவே என்னுடைய முடிவு என தெரிவித்தார்.
இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த விஜயபாஸ்கர்: இன்று முகூர்த்த நாள்.. எனக்கு பத்திரிகை வைத்தவர்களின் நிகழ்வுகளுக்கு செல்ல வேண்டும். இன்று மட்டும் 40 கல்யாணம் இருக்கு. கோயில் கும்பாபிஷேகம் இருக்கிறது. அப்போது தவெகவில் இணைகிறீர்களா என்ற கேள்விக்கு, நேற்றே பதில் சொல்லிவிட்டேன் என்றார். தொடர்ந்து அதிமுகவில் நீடிக்கிறீர்களா என்ற கேள்விக்கு, பதில் அளிக்காமல் சென்றார். இதன் மூலம் விஜயபாஸ்கர் அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

