- Home
- Tamil Nadu News
- மாணவர்கள் எதிர்பாராத அறிவிப்பை வெளியிட்ட அரசு.! கல்லூரியில் கூடுதலாக இடங்கள் அதிகரிப்பு
மாணவர்கள் எதிர்பாராத அறிவிப்பை வெளியிட்ட அரசு.! கல்லூரியில் கூடுதலாக இடங்கள் அதிகரிப்பு
உயர்கல்வி மாணவர் சேர்க்கை அதிகரிப்பால், அரசு, அரசு உதவி பெறும் மற்றும் சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக முறையே 20%, 15% மற்றும் 10% இடங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. இதன் மூலம் அதிக மாணவர்கள் உயர்கல்வி பயில வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

உயர்கல்வியில் சேரும் மாணவர்கள்
பள்ளி கல்வி முடித்து மாணவர்கள் உயர்கல்வியில் சேர்ந்து வருகிறார்கள். அந்த வகையில் பொறியியல் கலந்தாய்வு இன்று முதல் தொடங்கியுள்ளது. மருத்துவ கலந்தாய்வு விரைவில் தொடங்கப்படவுள்ளது. அதே நேரம் கலை அறிவியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கையானது நடைபெற்று வருகிறது. இதற்காக பல லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
விரைவில் கல்லூரி தொடங்கவுள்ள நிலையில் கலை அறிவியல் கல்லூரியில் இணைய மாணவர்கள் ஆர்வத்தோடு விண்ணப்பித்து வருகிறார்கள். இதனையடுத்து மாணவர்களுக்கு கூடுதல் இடங்களை ஒதுக்கீடு செய்யும் வகையில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இது தொடர்பாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
கல்விக்காக தமிழக அரசின் திட்டங்கள்
உயர்கல்வியும், மருந்துவமும் தனது இருகண்களாக கொண்டு நமது இளைய சமுதாயம் உலகளவில் உயர்ந்த நிலையில் திகழ வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு உயர்கல்வி அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என்பதால் புதுமைப்பெண், தமிழ் புதல்வன் போன்ற முத்தான திட்டங்களை வழங்கியதுடன் திறன் மிகுந்த சமுதாயத்தை உருவாக்க நான் முதல்வன் திட்டத்தின் கீழ் பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகளை இலவசமாக திறன் மேம்பாட்டு துறையின் மூலம் தமிழக முதலமைச்சர் வழங்கி வருகிறார்.
இதனால் கடந்த நான்காண்டுகளில் உயர்கல்வி சேர்க்கை பெறும் மாணாக்கர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்தியாவிலேயே மாணாக்கர் சேர்க்கை விகிதத்தில் தொடர்ந்து தமிழ்நாடு முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது.
கலை அறிவியல் கல்லூரியில் 20% மாணவர்கள் சேர்க்கை
இவ்வாண்டும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்க்கைக்காக அதிகளவில் மாணாக்கர்கள் விண்ணப்பத்து காத்திருக்கின்றனர். இதனை அறிந்திருந்த நமது முதலமைச்சர் அவர்கள் இவ்வாண்டு புதிதாக 15 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கிட ஆணையிட்டு, தற்போது தொடங்கப்பட்டுள்ளன. இருப்பினும் உயர்கல்வி பயில பெருமளவில் மாணாக்கர்கள் காத்திருப்பதை அறிந்து அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு கூடுதலாக 20% மாணவர் சேர்க்கை இடங்கள் உயர்த்தி வழங்கவும்.
அதேபோல் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 15% இடமும், சுயநிதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு 10% இடமும் கூடுதலாக மாணவர் சேர்க்கை இடங்கள் உயர்த்தி வழங்கவும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்கள்.
மாணவர்களுக்கு வாய்ப்பை அள்ளிக்கொடுக்கும் அரசு
அதன்படி, இவ்வாண்டு மேற்படி கூடுதல் இடங்கள் அறிவிக்கப்படுகிறது. மாணாக்கர்கள் இந்த நல்வாய்ப்பினை பயன்படுத்தியும். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஏழை, எளிய கிராமப்புற மாணாக்கர்கள் உயர்கல்வியில் சிறந்து விளங்க அறிவித்துள்ள அனைத்து நலத்திட்ட உதவிகளையும் பெற்று பெற்றோர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்து தங்களது வாழ்வில் முன்னேற்றம் பெற வாழ்த்துகிறேன் என உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார்